
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மவோயிஸ்டுகள் பயிற்சி பெற்றது குறித்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேரளா, தமிழ்நாடு, மற்றும் கர்நாடக மாநில எல்லைகளில் கடந்த 2017-ம் ஆண்டு சிபியை மாவோயிஸ்ட் இயக்கத்தினர் ரகசியமாக தீவிரவாத பயிற்சி மேற்கொண்டதாக தகவல் வெளியானது. மூன்று மாநிலங்களிலும் ஊடுருவி சதிச்செயல்களை அரங்கேற்றவும் அவர்கள் திட்டமிட்டு இருப்பதாகவும் கடந்த ஆண்டு பரபரப்பு தகவல்கள் வெளியாகின. இதையடுத்து மாவோயிஸ்டுகள் தீவிரவாத பயிற்சி மேற்கொண்டது தொடர்பக கடந்த ஆண்டு தேசிய புலனாய்வு முகமை எனப்படும் என்.ஐ.ஏ. வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கு தொடர்பாக பல்வேறு தகவல்களை திரட்டி விசாரணை நடத்திவரும் என்.ஐ.ஏ., இன்று காலை முதல் மூன்று மாநிலங்களில் அதிரட்சி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் கோவை, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, தேனி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஒட்டுமொத்தமாக 12 இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். கேரளாவில் 3 இடங்களிலும், பெங்களூருவில் 5 இடங்களிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கேரள மாநிலம் கொச்சினில் உள்ள தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நடத்திய சோதனையில் சி.பி.ஐ. மாவோயிஸ்ட் இயக்கம் தொடர்பான நூற்றுக்கணக்கான ஆவணங்கள், எலக்ட்ரானிக் உபகரணங்கள், கம்ப்யூட்டர் ஹார்டுடிஸ்க்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஒரே நேரத்தில் மூன்று மாநிலங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பண்டிகை நாட்களில் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.