
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் புதிய உலக சாதனை படைத்து இருக்கிறது. இதன் மூலம் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்து உள்ளது. அமராவதியை மகாராஷ்டிரா மாநிலத்தின் அகோலா பகுதியுடன் இணைக்கும் 75 கிலோமீட்டர் நெடுஞ்சாலையை ஐந்து நாட்களுக்குள் கட்டி முடித்த காரணத்தை அடுத்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கின்னஸ் பெற்று அசத்தி உள்ளது.
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கின்னஸ் வென்று இருக்கும் தகவலை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகத்துக்கான அமைச்சர் நிதின் கட்கரி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் அக்கவுண்டில் தெரிவித்து இருக்கிறார். தனது ட்விட்டர் பதிவில் புதிதாக அமைக்கப்பட்ட நெடுஞ்சாலை மற்றும் கின்னஸ் சாதனை சான்றிதழ் புகைப்படங்களை இணைத்து இருந்தார்.
நிதின் கட்கரி பாராட்டு:
இத்தகைய சாதனையை படைத்த தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு அமைச்சர் நிதின் கட்கரி தனது பாராட்டுக்களை தெரிவித்தார். அமராவதி மற்றும் அகோலா இடையே NH 53 தொடர்ச்சியான சாலையை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் 105 மணி நேரங்கள், 33 நிமிடங்களில் அமைத்து சாதனை படைத்தது.
“தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள், கண்சல்டண்ட் மற்றும் கன்செஷனர் ராஜ்பத் இன்ப்ராகான் பிரைவேட் லிமிடெட் மற்றும் ஜகதீஷ் கதாம் ஆகியோரின் அயராத பணி மூலம் கின்னஸ் சாதனை படைக்கப்பட்டு இருப்பதற்கு அனைவரையும் பாராட்டுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். NH-53 தொடர்ச்சியான சாலை அமராவதி முதல் அகோலா வரை அமைக்கப்பட்டு இருக்கிறது. இரவு பகலாக இந்த சாலையை அமைக்க உழைத்த நமது பொறியாளர்கள், பணியாளர்கள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்,” என அமைச்சர் நிதின் கட்கரி குறிப்பிட்டு உள்ளார்.
ஒருங்கிணைந்த உழைப்பு:
அமராவதி மற்றும் அகோலா இடையிலான நெடுஞ்சாலையின் கட்டுமான பணி சனிக்கிழமை காலை 6 மணிக்குத் துவங்கி நேற்று நிறைவடைந்தது. இந்த வழித் தடத்தில் கொல்கத்தா, ராய்ப்பூர், நாக்பூர், அகோலா, துலே மற்றும் சூரத் ஆகிய நகரங்களை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த சாலையை அமைக்க 800 ஊழியர்கள், 700 பணியாளர்களின் ஒருங்கிணைந்த உழைப்பில் உருவாகி உள்ளது.
முன்னதாக ராஜ்பாத் இன்ப்ராகான் நிறுவனம் சங்கலி மற்றும் சத்தாரா இடையே 24 மணி நேரத்தில் நெடுஞ்சாலை அமைத்து உலக சாதனை படைத்து இருந்தது.