
Netizens mocked Pakistani PM Shehbaz Sharif : இந்தியா-பாகிஸ்தான் இடையே பல நாட்கள் பதற்றமான சூழ்நிலைக்குப் பிறகு நேற்று போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் 'வெற்றி' என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவுக்கு தொழில்முறை மற்றும் பயனுள்ள பதிலை அளித்துள்ளதாகவும், அவர்களின் ராணுவ கிடங்குகள், வெடிமருந்து சேமிப்பு இடங்கள் மற்றும் விமானப்படைத் தளங்களை அழித்துவிட்டதாகவும் ஷெபாஸ் ஷெரீஃப் கூறினார். இந்தியா ஏற்கனவே பாகிஸ்தானின் கூற்றுக்களை "பொய்களின் தொகுப்பு" என்று கூறி நிராகரித்துள்ளது.
இந்தியா பாகிஸ்தானின் பிராந்திய ஒருமைப்பாட்டையும் இறையாண்மையையும் சவால் செய்ய முயன்றதாகவும், அப்பாவி மக்கள், மசூதிகள் மற்றும் பொதுமக்களைக் குறிவைத்ததாகவும் ஷெரீஃப் குற்றம் சாட்டினார். இந்தக் கூற்றையும் இந்தியா கடுமையாக மறுத்தது. மேலும் பாகிஸ்தான் பிரதமர் தனது உரையில், ராணுவத் தலைமையைப் பாராட்டினார் மற்றும் ராணுவத் தளபதி ஜெனரல் ஆசிம் முனீருக்கு அவரது துணிச்சலான தலைமைக்கு நன்றி தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீர் விவகாரம் குறித்து பாகிஸ்தான் பிரதமர்
மேலும் பிராந்திய அமைதியின் நலனுக்காக பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு நேர்மறையான பதிலை அளித்துள்ளதாக அவர் கூறினார். "நீர்வளப் பகிர்வு மற்றும் ஜம்மு காஷ்மீர் உட்பட அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்க, நீதி நெறிமுறைகளுக்கு ஏற்ப அமைதிப் பேச்சுவார்த்தைகளின் பாதை பின்பற்றப்படும் என்று நாங்கள் முழுமையாக நம்புகிறோம்" என்றும் ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் பிரதமரை கலாய்த்த நெட்டிசன்கள்
இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இந்தியா உடனான மோதலில் வெற்றி பெற்று விட்டோம் என கூறியதற்கு அவரை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். ''பாகிஸ்தான் ராணுவம் வீசிய ட்ரோன்கள், போர் விமானங்களை இந்தியா சுட்டு வீழ்த்தியது. ஆனால் இந்தியா வீசிய ட்ரோன்களை பாகிஸ்தானால் தடுத்து கூட நிறுத்த முடியவில்லை. இது தான் உங்கள் வெற்றியா?'' நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியா மோதலை நிறுத்தியதால் தப்பிய பாகிஸ்தான்
''மிஸ்டர் ஷெரீப். நல்லவேளை அமெரிக்கா, மற்ற நாடுகள் தலையிட்டு இந்த மோதலை நிறுத்தி விட்டது. அது மட்டும் நடக்கவில்லை என்றால் பாகிஸ்தான் என்ற நாடே வரைபடத்தில் இருக்காது'' என்று வேறு சிலர் கலாய்த்துள்ளனர். மேலும் சில நெட்டிசன்கள், ''இந்தியா இந்த மோதலை நிறுத்தி இருக்கக் கூடாது. அப்படி தொடர்ந்து இருந்தால் ஷெபாஸ் ஷெரீப் இப்படி பேசிக் கொண்டிருப்பாரா''என கூறியுள்ளனர்.