முதல்வர் பினராயி விஜயனால் என்னுடைய உயிருக்கு ஆபத்து.. நீதிமன்றத்தில் கதறும் ஸ்வப்னா சுரேஷ்..!

By vinoth kumarFirst Published Jun 14, 2022, 11:10 AM IST
Highlights

சொப்னா சார்பில் எர்ணாகுளம் மாவட்ட நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக நான் நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் அளித்ததற்கு பின்னர் அவரால் என்னுடைய உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

கேரள முதல்வர் பினராயி  விஜயனால் உயிருக்கு ஆபத்து உள்ளதால் மத்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்க உத்தரவிட வேண்டும் என்று கூறி சொப்னா எர்ணாகுளம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

தங்க கடத்தல் வழக்கு

திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக முகவரிக்கு, கடந்த 2020ம் ஆண்டு ஜூலை மாதம் சரக்கு பெட்டிகளில் சுமார் 30 கிலோ கடத்தல் தங்கம் இருந்துள்ளது. இந்தக் கடத்தலில் தீவிரவாத அமைப்புகளுக்கு தொடர்பிருக்கலாம் எனக் கருதப்பட்டதால், இந்த வழக்கு தேசிய புலனாய்வு அமைப்பிடம் (என்ஐஏ) ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து விசாரித்த தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள், இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக கேரள அரசின் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் பணிபுரிந்து வந்த ஸ்வப்னா சுரேஷ், அவரது நண்பர் சந்தீப் நாயர், பி.எஸ். சரீத் உட்பட 12 பேரை கைது செய்தனர்.

ரகசிய வாக்குமூலம்

இந்த கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாக முதல்வரின் முதன்மைச் செயலாளர் சிவசங்கரனும் கைது செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில், ஸ்வப்னா சுரேஷ், சிவசங்கரன் உள்ளிட்டோர் ஜாமீனில் உள்ளனர். இதனிடையே, இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய புள்ளிகளின் பெயர்களை வெளியிடுவேன் என ஸ்வப்னா சுரேஷ் அண்மையில் கூறியிருந்தார். அதன்படி, பணமோசடி தடுப்பு நீதிமன்றத்தில் அவர் ரகசிய வாக்குமூலம் அளித்தார். அதில், தங்கக் கடத்தல் வழக்கில் கேரள முதல்வர் பினராயி விஜயன், அவரது மனைவி கமலா, மகள் வீணா உள்ளிட்டோருக்கு தொடர்பு இருப்பதாக தெரிவித்திருந்தார். இது கேரள அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதனை முதல்வர் பினராயி விஜயன் திட்டவட்டமாக மறுத்தார்.

உயிருக்கு அச்சுறுத்தல்

இதையடுத்து பினராயி விஜயன் செல்லும் இடங்களில் எல்லாம் எதிர்க்கட்சியினர் மறியல் போராட்டமும்,  கருப்புக்கொடி காண்பித்தும், கொடும்பாவி எரித்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், முக்கிய ஆடியோ ஒன்றை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்தார்.  இந்நிலையில், நேற்று சொப்னா சார்பில் எர்ணாகுளம் மாவட்ட நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக நான் நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் அளித்ததற்கு பின்னர் அவரால் என்னுடைய உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

மத்திய போலீஸ் பாதுகாப்பு

24 மணி நேரமும் போலீசார் என்னை கண்காணித்து வருகின்றனர். இதனால் பயம் ஏற்பட்டுள்ளது. எனவே எனக்கு மத்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் முன்னாள் அமைச்சர் ஜலீலின் புகாரின் பேரில் திருவனந்தபுரம் கண்டோன்மெண்ட் போலீஸ் என் மீது பதிவு செய்துள்ள வழக்கை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இதை விசாரித்த நீதிமன்றம், சொப்னாவுக்கு மத்திய போலீஸ் பாதுகாப்பு அளிப்பது தொடர்பான வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

click me!