
ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள பிரசித்தி பெற்ற ஏழுமலையான் கோயிலில் உகாதி பண்டிகையன்று முஸ்லிம்கள் வழிபட்டு வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் கடப்பாவில் லட்சுமி பிரசன்ன வெங்கடேஸ்வரர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த கோயில் தேவுண்ணி கடப்பா என்ற பகுதியில் அமைந்துள்ளது. தேவுண்ணி கடப்பா என்றால் கடவுளின் வாசற்படி என்று பொருளாகும். இக்கோயிலில் மூலவர் வெங்கடேஸ்வரரும் அவரின் இடது பக்கம் தனிச் சன்னிதியில் மகாலட்சுமியும் குடி கொண்டுள்ளனர். இக்கோயிலுக்கு வெவ்வேறு காலகட்டங்களில் மட்டி ராஜுலு, விஜயநகர அரசர்கள், நந்தியாலா அரசர்கள் திருப்பணிகளைச் செய்துள்ளனர்.
ஆண்டுதோறும் தெலுங்கு வருடப் பிறப்பான உகாதி அன்று இங்குள்ள பெருமாளை, முஸ்லிம்கள் குடும்பத்தினருடன் வழிபடுவதுதான் இக்கோயிலின் தனிச்சிறப்பாகும். ரதசப்தமி தினத்தன்று திரளான முஸ்லிம் பக்தர்கள் பங்கேற்று சுவாமியின் தேரை வடம் பிடித்து இழுத்து நேர்த்தி கடன்களையும் செலுத்துகின்றனர்.
இதுகுறித்து இஸ்லாமிய பெண்கள் கூறுகையில்;- ஏழுமலையானின் மனைவியாக இதிகாசங்களில் கூறப்படும் பீபீ நாச்சாரம்மா எங்கள் மதத்தைச் சேர்ந்தவர் என்பதால், ஏழுமலையான் எங்களுக்கு உறவினர் ஆவார். இதனால் நாங்கள் ஏழுமலையானை வழிபடுகிறோம். மேலும், எங்களின் வீடுகளில் பிறக்கும் மூத்தவர் ஆண்டிற்கு ஒரு முறையாவது இவரை வழிபட்டே ஆக வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.