25 அடிக்கு குழி தோண்டி லாக்கரில் கொள்ளை! சினிமா காட்சிகளை மிஞ்சிய பரபரப்பு சம்பவம்!

First Published Nov 14, 2017, 3:28 PM IST
Highlights
Mumbai breaking the bank locker robbery


சினிமா காட்சிகளையும் மிஞ்சும் வகையில், மும்பையில் பேங்க் ஆப் பரோடா வங்கியில், குழி தோண்டி லாக்கரில் கொள்ளையடித்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நவி மும்பையில் பேங்க் ஆப் பரோடாவில் நேற்று வழக்கம்போல் ஊழியர்கள் பணிக்கு வந்துள்ளனர். பணிக்கு வந்த ஊழியர்கள் வங்கியை திறந்து பார்த்து அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். வங்கி லாக்கர் உடைக்கப்பட்டிருந்ததை கண்ட பணியாளர்கள், உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர்.  தகவல் அறிந்து வந்த போலீசார், வங்கியில் சோதனை நடத்தினர். வங்கியில் லாக்கர் இருக்கும் தரை பகுதி சுரங்கம்போல தோண்டப்படிருப்பதை
போலீசார் கண்டுபிடித்தனர். 

இந்த வங்கியில் 225 லாக்கர்கள் உள்ளன. இதில் வாடிக்கையாளர்களின் நகைகள் வைக்கப்பட்டுள்ளன. சுரங்க பகுதியில் உள்ளே வந்த கொள்ளையர்கள், வங்கியில் இருந்த 30-க்கும் மேற்பட்ட லாக்கர்களை உடைத்து கொள்ளையடித்துள்ளதாக போலீசார் கூறினர். சுமார் 25 அடி ஆழத்துக்கு பள்ளம் வெட்டப்பட்டுள்ளதாகவும், இந்த சுரங்கப்பாதையில் 2 பேர் செல்லும் அளவுக்கு அகலமாக இருந்ததாகவும் போலீசார் கூறினர். வங்கி லாக்கர் வரை தோண்டப்பட்ட பள்ளம், பக்கத்து கடையை இணைக்கும் வகையில் சுரங்கம் தோண்டப்பட்டு உள்ளது. இதன் வழியாகவே, லாக்கர்களை கொள்ளையர்கள் தூக்கி சென்றிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். 

சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் விடுமுறை என்பதால் கொள்ளையர்கள் இந்த அளவுக்கு குழி தோண்டி கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக போலீசார் கூறுகின்றனர்.

வங்கி லாக்கரை கொள்ளையடிக்கும் திட்டத்துக்காக, கொள்ளையர்கள், பக்கத்து கடையை வாடகைக்கு எடுத்து இருப்பதாகவும், இதற்காக கடந்த சில மாதங்களாக அவர்கள் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது. இதில் பெரிய விஷயம் என்னவென்றால், வங்கியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகதபடி கொள்ளைச்சம்பவம் நடந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இதனை அடுத்து, போலீசார் பக்கத்து கடையின் உரிமையாளரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளையில் 40 லட்சம் மதிப்பிலான நகைகளும், வைரங்களும் கொள்ளைப்போயுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். சினிமா காட்சிகளையும் மிஞ்சும் வகையில் நடந்த இந்த கொள்ளைச்சம்பவம், அனைவரையும் அதிச்சிக்குள்ளாக்கியுள்ளது.

click me!