"வெளிநாடுவாழ் இந்தியர்கள் மூலம் 69 பில்லியன் டாலர் பணம் கிடைக்கிறது" - பிரதமர் மோடி பேச்சு

First Published Jan 8, 2017, 12:44 PM IST
Highlights


நாட்டின் வளர்ச்சியில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் முக்கிய பங்கு வகிப்பதாக பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.

வெளிநாடு வாழ் இந்தியர்களை கவுரவிக்கும் விதத்தில் பெங்களூருவில் இன்று முதல் 3 நாட்களுக்கு பிரவாசி பாரதிய திவாஸ் என்ற பெயரில் மத்திய அரசு நிகழ்ச்சி ஒன்றை நடத்துகிறது. இதில் இந்திய வம்சவாழியை சேர்ந்த போர்ச்சுகல் நாட்டின் பிரதமர் அன்டோனியா கோஸ்டா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். ஏராளமான வெளிநாடு வாழ் இந்தியர்கள் கலந்து கொண்டுள்ள கூட்டத்தில் பிரதமர் நரேந்திரமோடி உரையாற்றினார். 

அப்போது பேசிய பிரதமர், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு, வெளிநாடு வாழ் இந்தியர்கள் முக்கிய பங்களிப்பை அளிப்பதாக தெரிவித்தார். ஆண்டுதோறும் சுமார் 69 பில்லியன் டாலர் மதிப்பிலான பணம் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மூலம் இந்தியாவிற்கு அனுப்பப்படுவதாக அவர் கூறினார்.
வெளிநாடு வாழ் இந்தியர்களின் பாதுகாப்பில் இந்திய அரசு முன்னுரிமை அளிப்பதாகவும், அவர்களது பிரச்சனைகளை உடனடியாக தீர்க்க வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலம் இந்திய தூதரகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

வெளிநாட்டில் வேலை பெற முயற்சிக்கும் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கும் திட்டம் தொடங்கப்படும் என அவர் குறிப்பிட்டார். இந்தியா மற்றும் வெளிநாடுகளில் பல்வேறு துறைகளில் சிறப்பான பங்களிப்பை வழங்கிய வெளிநாடு வாழ் இந்தியர்கள் 30 பேருக்கு நாளை குடியரத் தலைவர் பிரணாப் முகர்ஜி விருது வழங்கி கவுரவிக்க இருப்பதாக மோடி தெரிவித்தார்.

click me!