
டிசம்பர் 30-ந்தேதிக்கு பின், நாட்டில் ஊழல்வாதிகளுக்கும், கருப்பு பணம் பதுக்குவோருக்கும், நேர்மையற்ற மக்களுக்கும் பிரச்சினைகள் அதிகரிக்கும். அவர்கள் அழிக்கப்படுவார்கள். நாட்டின் நலனுக்காக எந்தவிதமான கடினமாக முடிவுகளையும் எடுக்க இந்த அரசு தயங்காது என பிரதமர் நரேந்திர மோடி கடும் எச்சரிக்கை விடுத்தார்.
அடிக்கல் நாட்டு விழா
மும்பையில், ரூ.3600 கோடியில் சத்ரபதி சிவாஜி சிலைக்கும் அடிக்கல் நாட்டு விழா, இரு மெட்ரோ ரெயில் திட்டங்களை தொடங்கி வைப்பது, பங்குச்சந்தை ஒழுங்கமைப்பு நிறுவனமான ‘செபி’ க்கு தலைமை அலுவலகம் திறப்பு விழா என பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி நேற்று கலந்து கொண்டார்.
இதில் சிவாஜி சிலை அடிக்கல் நாட்டு விழாவுக்குபின், பிரதமர் மோடி பேசியதாவது-
குறுகியகால சிரமம்
நாட்டில் கருப்புபணம், ஊழலை ஒழிக்கும் வகையில் கடந்த மாதம் 8-ந்தேதி ரூ.500, ரூ.1000 நோட்டுகளை தடை செய்து நான் வௌியிட்ட அறிவிப்பு மிகவும் கடினமான முடிவாகும். ரூபாய் மதிப்பிழத்தல் முடிவால் மக்களுக்கு குறுகிய காலத்துக்கு மட்டுமே சிரமங்கள் இருக்கும். ஆனால், அந்த முடிவால் நீண்ட காலத்துக்கு பலன்களை அனுபவிக்க முடியும்.
படிப்படியாக....
நான் கூறியது போல 50 நாட்களுக்கு மட்டும் மக்கள் சிரமங்களுக்கு இருக்கும். நாட்டின் நலனுக்காக வேதனைகளையும், வலியையும் தாங்கிக்கொண்டு ஆதரவு தந்து கொண்டு இருக்கிறார்கள். நிச்சயமாக டிசம்பர் 30-ந் தேதிக்கு பின், நேர்மையான மக்களுக்கு சிரமங்கள் படிப்படியாகக் குறையும்.
அழிக்கப்படுவார்கள்
அதேசமயம், ஊழல்வாதிகள், நேர்மையற்ற மக்கள், கருப்புபணம் பதுக்கல்காரர்களுக்கு இம்மாதம் 30-ந் தேதிக்கு பின், கடினமான காலமாகும். சிரமங்களும், பிரச்சினைகளும் கடுமையாக அதிகரிக்கும். 125 கோடி மக்களின் மனநிலையை நேர்மை அற்ற மக்கள் குறைத்து மதிப்பிடக் கூடாது. அதைக் கண்டு அச்சப்பட வேண்டும். நேர்மையற்ற மக்களை அழிக்கும் காலம் வந்துவிட்டது. இது நாட்டை சுத்தப்படுத்தும் பிரசாரமாகும்.
தொடர்ந்து போரிடுவோம்
ஊழலுக்கு எதிரான போரில் வெற்றி கிடைக்கும் வரை தொடர்ந்து போரிடுவோம். நான், பிரதமராக பதவி ஏற்றபோதே, ஊழலுக்கு எதிரான போரைத் தொடங்கிவிட்டேன். இதற்காக சில கடினமான முடிவுகளை எடுத்தேன். அதில் மிக முக்கியமானது, கருப்புபணப் பதுக்கல்காரர்களுக்கு எதிரான நவம்பர் 8-ந்தேதிஅறிவிப்பாகும்.
ரூபாய் நோட்டு விவகாரத்தில் மக்களிடையே பதற்றத்தையும், பயத்தையும் உண்டாக்கி, தவறான பாதையில் வழிநடத்த எதிர்க்கட்சிகள் முயற்சிக்கின்றனர்.
70 ஆண்டுகளாக...
நாடு சுதந்திரம் பெற்றதில் இருந்து ஒரு கட்சி(காங்கிரஸ் கட்சி) ஆண்டு வருகிறது. ஆனால், ஏழ்மையை ஒழிக்கமுடியவில்லை, வளர்ச்சியை கொண்டு வரமுடியவில்லை. 70 ஆண்டுகளாக 18 ஆயிரம் கிராமங்கள் 18-ம் நூற்றாண்டில் காலம் போல பின்தங்கிய வாழ்க்கையை வாழ்ந்துவருகிறார்கள்.
வளர்ச்சி முக்கியம்
நாட்டில் உள்ள முக்கிய பிரச்சினைகளை தீர்க்க வளர்ச்சி ஒன்றே வழி. 125 கோடி மக்களை வலிமைப்படுத்தி மாற்றத்தை உண்டாக்குவோம். மக்கள் மரியாதையுடன், கவுரவத்துடன் வாழ மேம்பாடு, வளர்ச்சிதான் ஒரே வழி. தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து வளர்ச்சி ஒன்றையே கருத்தாக கொண்டு செயல்பட்டு வருகிறது.
சத்திரபதி சிவாஜி மகராஜா பன்முகத்திறமை உடையவர். அவரின் துணிச்சல் அனைவரும் அறிந்ததே. அவரின் ஆளுமை பல்வேறு தரப்பினரையும் ஈர்க்கும் தன்மை உடையது எனத் தெரிவித்தார்.
பொருளாதார கொள்கைகள்
முன்னதாக பங்குச்சந்தை ஒழுங்கு அமைப்பு நிறுவனமான ‘செபி’யின்தலைமைகட்டிடத்தை திறந்து வைத்து மோடிபேசுகையில், “ வலிமையான, மிகவும் திறன்வாய்ந்த பொருளாதாரக் கொள்கைகள் நாட்டின் நலனுக்காக, வரும் காலத்தில் குறுகியகால நோக்கில் அல்லாமல், நீண்டகால பயன் அடிப்படையில் கொண்டுவரப்படும்.
வரி உயரும்
பங்குச்சந்தையில் இருந்து பலன் அடைவோர்கள், நாட்டின் நலனுக்காக வரி மூலம் தங்கள் பங்களிப்பை அளிக்க வேண்டும். பங்குச்சந்தையில் பங்கேற்கும் பல்வேறு நிறுவனங்களிடம் இருந்தும், பங்கேற்பாளர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் வரி சதவீதம் நியாயமான முறையில், வெளிப்படைத்தன்மையுடன், வரும் காலத்தில் அதிகரிக்கப்படும்.
அதேசமயம், மிக எளிமையான, வெளிப்படைத்தன்மையுடன், நியாயமான, வளர்ச்சிக்குரிய வரி முறையை கொண்டுவருவது குறித்து சிந்திக்க வேண்டிய நேரமாகும்'' எனத் தெரிவித்தார்.