
தமிழக மீனவர்களை தாக்கினால் கடும் நடவடிக்கை….இலங்கைக்கு மோடி எச்சரிக்கை…
தமிழக மீனவர்கள் மீது எந்த ஒரு சூழ்நிலையிலும் மனிதாபிமானமற்ற முறையில் தாக்குதல் நடத்தினால் கடும் விளைவுகளை இலங்கை அரசு சந்திக்க வேண்டி வரும் என அந்நாட்டு பிரதமரிடம் மோடி எச்சரிக்கை விடுத்தார்.
ஐந்து நாள் அரசு முறை பயணமாக இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இந்தியா வந்துள்ளார். அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, இரு நாடுகளுக்கு இடையே உள்ள பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதித்தனர்.
இலங்கை கடற்படையால் தொடர்ந்து தமிழக மீனவர்கள் தாக்குதலுக்கு ஆளாகி வரும் நிலையில் மீனவர்களின் விவகாரம் இரு தலைவர்களின் பேச்சுவார்த்தையில் முக்கிய இடம் பிடித்தது.
அப்போது தமிழக மீனவர்கள் மீது எந்த ஒரு சூழ்நிலையிலும் மனிதாபிமானமற்ற முறையில் தாக்குதல் நடத்தினால் கடும் விளைவுகளை இலங்கை அரசு சந்திக்க வேண்டி வரும் என ரணில் விக்ரமசிங்கேவிடம் மோடி எச்சரிக்கை விடுத்தார்.
மேலும், ஆழ்கடலில் மீன்பிடிக்கும் திட்டத்தை இந்திய மீனவர்கள் செயல்படுத்த இந்திய அரசு மேற்கொண்ட ஊக்குவிப்பு நடவடிக்கைகளை இலங்கைக்கு இந்தியா தெரிவித்தது.
சந்திப்பு நிறைவடைந்த பின்னர் இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது வணிகம், இயற்கை எரிவாயு தொடர்பான சில ஒப்பந்தங்கள் இரு நாடுகளுக்கிடையே கையெழுத்தாயின.
முன்னதாக இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரையும் ரணில் விக்ரமசிங்கே சந்தித்து பேசினார்.