மினிமம் பேலன்ஸ் வைத்திருக்காதவங்ககிட்ட வசூலித்த அபராதம் எவ்வளவு தெரியுமா ?

By Selvanayagam PFirst Published Jul 24, 2019, 10:22 PM IST
Highlights

வங்கிக் கணக்குகளில் மினிமம் பேலன்ஸ்  வைத்திருக்காத வாடிக்கையாளர்களிடம் 2018-19ஆம் ஆண்டில் மட்டும் வங்கிகள் ரூ.3,309.44 கோடி அபராதம் வசூல் செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கியின் வழிமுறைகளின் படி, அடிப்படை சேமிப்பு வங்கிக் கணக்குகளில் வாடிக்கையாளர்கள் குறைந்தபட்ச இருப்புத் தொகை வைத்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. 

அதேபோல, பிரதமரின் ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் தொடங்கப்படும் வங்கிக் கணக்குகளிலும் குறைந்தபட்ச இருப்புத் தொகை சார்ந்த கட்டுப்பாடுகள் இல்லை. ஆனால் மற்ற சேமிப்புக் கணக்குகளில் ஒவ்வொரு வங்கிக்கும் குறிப்பிட்ட இருப்புத் தொகை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதை வைத்திருக்காத வாடிக்கையாளர்களிடம் சேவைக் கட்டணமாக அபராதம் வசூல் செய்யப்படுகிறது.

இவ்வாறாக 2016-17 முதல் 2018-19 வரையிலான ஆண்டுகளில் இந்தியாவின் 18 பொதுத் துறை வங்கிகளும் நான்கு முன்னணி தனியார் துறை வங்கிகளும் வசூலித்த அபராதத் தொகை குறித்த விவரங்களை மக்களவையில் நிதித் துறை இணையமைச்சரான அனுராக் தாகூர் வெளியிட்டுள்ளார். 

அதன்படி, 2016-17ஆம் ஆண்டில் குறைந்தபட்ச இருப்புத் தொகை வைத்திருக்காத வாடிக்கையாளர்களிடம் பொதுத் துறை வங்கிகள் ரூ.1,115.44 கோடி வசூல் செய்துள்ளன.
இதே ஆண்டில் தனியார் வங்கிகள் ரூ.790.22 கோடி அபராதம் வசூலித்துள்ளன. 2017-18ஆம் ஆண்டில் பொதுத் துறை வங்கிகள் ரூ.1,138.42 கோடியும், தனியார் வங்கிகள் ரூ.3,368.42 கோடியும் வசூல் செய்துள்ளன. 

2018-19ஆம் ஆண்டில் பொதுத் துறை வங்கிகள் ரூ.1,312.98 கோடி, தனியார் வங்கிகள் ரூ.1,996.46 கோடி என மொத்தம் ரூ.3,309.44 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது.

click me!