MiG-21 : சோதனை மேல் சோதனை.. விமானப்படையில் மீண்டும் ஒரு விபத்து.. விங் கமாண்டர் பலி..

By Raghupati RFirst Published Dec 25, 2021, 11:09 AM IST
Highlights

இந்திய விமானப்படையை சேர்ந்த விமானம் ஒன்று மீண்டும் விபத்தில் சிக்கியுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்திய விமானப் படைக்கு சொந்தமான மிக்-21 MIG-21 ரக விமானம் விபத்துக்குள்ளானது. இதில் பைலட் உயிரிழந்தார். இந்திய விமானப் படை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், IAF-ன் MiG-21 விமானம், பயிற்சியின் போது மேற்கு செக்டாரில்பறந்து விபத்துக்குள்ளானது என்று பதிவிட்டிருந்தது. அதாவது, ராஜஸ்தானின் ஜெய்சல்மாரில், இந்திய விமானப் படைக்கு சொந்தமான மிக் - 21 ரக போர் விமானம் நேற்று மாலை பயிற்சியில் ஈடுபட்டு இருந்தது.

அப்போது, பாலைவன தேசிய பூங்கா பகுதியில் இரவு 8:30 மணியளவில் விமானம் விழுந்து நொறுங்கியது. இதில், விமானத்தை இயக்கிய பைலட் விங் கமாண்டர் ஹர்ஷித் சின்ஹா சம்பவ இடத்திலேயே பலியானார். இதனை உறுதிப்படுத்திய இந்திய விமானப் படை, விமான விபத்தில் விங் கமாண்டர் ஹர்ஷித் சின்ஹாவின் சோகமான மறைவை IAF ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம் எனவும் அவரது குடும்பத்துடன் உறுதுணையாக விமானப் படை நிற்கும் என்றும் ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

இந்த விபத்து தொடர்பாக இந்திய விமானப் படை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்திய ராணுவத்தில் கடந்த 1963ம் ஆண்டு மிக் ரக விமானங்கள் இணைக்கப்பட்டன. இதுவரை 874 மிக் ரக விமானங்கள் ராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளன. இதில், 400 விமானங்கள் விபத்தை சந்தித்துள்ளன.ஆண்டுதோறும் 10க்கும் மேற்பட்ட விபத்துகள் இந்த ரக விமானங்களில் ஏற்படுகிறது என்று கூறுகின்றனர் ராணுவத்தினர். 

எனவே, தான் இதை ‘பறக்கும் சவப்பெட்டி’ என்று அழைக்கின்றனர்.இந்த ரக விமான வகையில் சுமார் 200 பைலட்களுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த ஆண்டில் மட்டும் 5 மிக்-21 ரக விமானங்கள் விபத்துக்குள்ளாகி 3 பைலட்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!