பகுஜன் சமாஜ் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து ஆகாஷ் ஆனந்த் நீக்கம்!

By Manikanda PrabuFirst Published May 8, 2024, 1:30 PM IST
Highlights

பகுஜன் சமாஜ் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து ஆகாஷ் ஆனந்தை அக்கட்சித் தலைவர் மாயாவதி நீக்கியுள்ளார்

பகுஜன் சமாஜ் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து தனது மருமகன் ஆகாஷ் ஆனந்தை அக்கட்சித் தலைவர் மாயாவதி நீக்கியுள்ளார். ஆகாஷ் ஆனந்த், தனது அரசியல் வாரிசு என்ற அறிவிப்பையும் அவர் திரும்பப் பெற்றுள்ளார். பாஜக ஆளும் மத்திய அரசை குறிப்பிட்டு பேசி தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து ஆகாஷ் ஆனந்த் நீக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவருமான மாயாவதி தனது எக்ஸ் பக்கத்தில், சிறிது முதிர்ச்சி அடையும் வரை பதவியில் இருந்து ஆகாஷ் நீக்கப்படுவதாக பதிவிட்டுள்ளார்.

தென்னிந்தியர்கள் ஆப்பிரிக்கர்களைப் போல இருக்கிறார்கள்: சாம் பிட்ரோடா கருத்தால் சர்ச்சை!

லண்டனில் எம்.பி.ஏ படித்துள்ள ஆகாஷ், மாயாவதியின் சகோதரர் ஆனந்தின் மகன் ஆவார். கடந்த 2019 மக்களவை தேர்தலின் மாயாவதியின் பிரசாரத்தின் போது, முக்கிய முகமாக பார்க்கப்பட்ட ஆகாஷ் ஆனந்த் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராக உள்ளார். வாரிசு அரசியலை கடுமையாக விமர்சிக்கும் மாயாவதி, 2019ஆம் ஆண்டில் தனது சகோதரர் ஆனந்த் குமாரை கட்சியின் தேசிய துணைத் தலைவராக நியமித்தார். அவரது மகனும், தனது மருமகனுமான ஆகாஷ் ஆனந்தை கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராக நியமித்த மாயாவதி, தனது அரசியல் வாரிசாகவும் ஆகாஷ் ஆனந்தை அறிவித்தார்.

ஆகாஷ் ஆனந்தை பதவியில் இருந்து நீக்கியது தொடர்பாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறுகையில், “பகுஜன் சமாஜ் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து ஆகாஷ் ஆனந்தை நீக்கியுள்ளது அக்கட்சியின் உட்கட்சி விவகாரம். இதுவரை நடந்த 3 கட்ட தேர்தல்களிலும் அக்கட்சிக்கு ஒரு இடத்தில் கூட வெற்றி கிடைக்காது. அரசியலமைப்பு மற்றும் இட ஒதுக்கீட்டை காக்க பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவாளர்கள் இந்தியா கூட்டணிக்கு இம்முறை வாக்களித்துள்ளனர்.” என்றார்.

click me!