15 லட்சம் சம்பளம் வேண்டாம்... வேலையை விட்டுவிட்டு விவசாயத்தில் வெற்றி பெற்ற இளைஞர்!

By SG BalanFirst Published May 7, 2024, 4:42 PM IST
Highlights

விவசாயக் குடும்பத்தில் இருந்து வந்த சேத்தனுக்கு தானும் விவசாயத்தில் ஈடுபட வேண்டும் என்று ஆர்வம் வந்தது. இதனால், ஊரில் உள்ள தங்கள் நிலத்தில் காளான் வளர்ப்பைத் தொடங்கினார். அது நல்ல லாபத்தைக் கொடுத்தது. இதனால் நம்பிக்கையுடன் முழுவீச்சில் விவசாயத்தில் ஈடுபட முடிவு செய்து, பெங்களூரு வேலையை விட்டுவிட்டார்.

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் நல்ல சம்பளத்தில் கார்ப்பரேட் நிறுவனத்தில் பார்த்து வந்த வேலையை விட்டுவிட்டு, அரிய வகை பழத்தை விற்பனை செய்யும் தொழில்முனைவோராக வெற்றி பெற்றிருக்கிறார்.

கர்நாடகாவில் மங்களூருவைச் சேர்ந்தவர் சேத்தன் ஷெட்டி. மெக்கானிக்கல் என்ஜினியரிங் பட்டதாரியான இவர் பெங்களூருவில் உள்ள பெரிய நிறுவனம் ஒன்றில் சேல்ஸ் பிரிவில் தலைமை பதவியில் இருந்தார். ஆண்டுக்கு 15 லட்சம் ரூபாய் சம்பாதித்து வந்தார். இவரது குடும்பத்தினர் மங்களூருவில் விவசாயம் செய்துவந்தனர்.

விவசாயக் குடும்பத்தில் இருந்து வந்த சேத்தனுக்கு தானும் விவசாயத்தில் ஈடுபட வேண்டும் என்று ஆர்வம் வந்தது. இதனால், ஊரில் உள்ள தங்கள் நிலத்தில் காளான் வளர்ப்பைத் தொடங்கினார். அது நல்ல லாபத்தைக் கொடுத்தது. இதனால் நம்பிக்கையுடன் முழுவீச்சில் விவசாயத்தில் ஈடுபட முடிவு செய்து, பெங்களூரு வேலையை விட்டுவிட்டார்.

2015ஆம் ஆண்டு மஞ்சள் பயிரிட்டார். அதில் 165 கிலோ மஞ்சள் அறுவடை செய்தார். மஞ்சளை மஞ்சளாகவே விற்பனை செய்யாமல் மஞ்சள் தூளாக மாற்றி கிலோ ரூ.450 க்கு விற்றார். அதிலும் நல்ல லாபம் வந்தது. 2017ஆம் ஆண்டு கூடுதலாக நிலத்தை வாங்கி இந்தியாவில் அபூர்வமாகக் கிடைக்கும் பழங்களை விளைய வைத்து விற்பனை செய்ய வேண்டும் என்று திட்டம் போட்டார்.

அதன்படி நான்கு ஏக்கரில் ரம்புட்டன், மேங்கோஸ்டின், அவகேடோ ஆகியவற்றை பயிரிட்டார். கேரளாவில் இருந்து இதற்கான கன்றுகளை வாங்கினார். ஒரு ரம்பூட்டன் கன்றின் விலை ரூ.350 க்கு வாங்கினார்.

பெரும்பாலும் இந்தியாவில் கிடைக்கும் ரம்புட்டன் பழங்கள் மலேசியா, தாய்லாந்து மற்றும் தென்கிழக்காசிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுபவை. ரங்புட்டன் கன்றுகளை 35 அடி இடைவெளியில் தான் நடவு செய்ய வேண்டும். ஆனால், இவர் 15 அடி இடைவெளியில் நட்டார். அவரது புதிய ஐடியா கைகொடுத்தது. விளைச்சலும் அமோகமாக இருந்தது.

இதனால், சேத்தனின் ரம்புட்டான் பழங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்போது தான் விளைவிக்கும் பழங்களை நாடு முழுவதும் விற்பனை செய்கிறார். 2023ஆம் ஆண்டு கூடுதலாக 100 ரம்புட்டன் மரங்களை நட்டிருக்கிறார். அவை இரண்டு மூன்று ஆண்டுகளில் கனிகளைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கிறார்.

ரம்புட்டன், அவகேடோ போன்ற பழங்களுடன் வெண்ணிலா, மேஸ் பிளவர் கன்றுகளையும் நட்டு வளர்த்து வருகிறார். வாடிக்கையாளர்களும் விரும்பி வாங்கி, ஆதரவு தருவதாக மகிழ்சியுடன் கூறுகிறார்.

click me!