கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதை தடுக்கும் வகையில் மக்கள் சமூக விலகலை கடைபிடிக்கும் விதமாக நாடு முழுவதும் அமலில் இருக்கும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு உத்தரவு இன்றுடன் நிறைவடைகிறது. தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களிலும் இம்மாத இறுதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருக்கும் நிலையில் காலை 10 மணியளவில் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாட இருப்பதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.
அதன்படி தற்போது உரையாடி வரும் பிரதமர் மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தெரிவித்திருக்கிறார். அவர் பேசும் போது நாட்டு மக்களின் ஒத்துழைப்புடன் கொரோனாவை கட்டுப்படுத்தி வருகவதாகவும் ஊரடங்கால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமத்தை தன்னால் புரிந்து கொள்ள முடிகிறது என்று தெரிவித்துள்ளார். கொரோனாவை கட்டுப்படுத்துவதில் மக்கள் ராணுவ வீரர்கள் போல செயல்படுவதாக கூறிய பிரதமர் அதன் காரணமாகவே இந்தியாவில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் இருப்பதாக தெரிவித்தார். பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா கொரோனாவிற்கு எதிரான நடவடிக்கைகளை சிறப்பாகவே செய்து வருகிறது என்று பிரதமர் கூறினார்.
மேலும் சரியான நேரத்தில் ஊரடங்கை அமல்படுத்திய இந்தியாவின் பாதை சரியானது என்றும் பொருளாதாரத்தை விட மக்களின் உயிரே முக்கியம் என்று தெரிவித்துள்ளார். கொரோனாவின் தீவிரம் இந்தியாவில் அதிகரித்ததில் இருந்து பிரதமர் 3 முறை மக்களிடம் உரையாற்றி இருக்கிறார். முதலில் மார்ச் 22ம் தேதி அமல்படுத்தப்பட்ட ஒரு நாள் சுய ஊரடங்கு குறித்து பேசினார். பின் 23ம் தேதி இரவு நாட்டு மக்களிடம் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நள்ளிரவு முதல் இந்தியாவில் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவித்தார். தொடர்ந்து ஏப்ரல் 3ம் தேதி காலையில் உரையாற்றிய பிரதமர் மோடி ஊரடங்கின் இறுதி நாளான இன்று 4வது முறையாக பேசியுள்ளார்.