தற்போது உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தனது கோர முகத்தைக் காட்டத் தொடங்கியுள்ளது. இதுவரையில் 9,352 பேர் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் 324 பேர் இந்தியாவில் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதை தடுக்கும் வகையில் மக்கள் சமூக விலகலை கடைபிடிக்கும் விதமாக நாடு முழுவதும் அமலில் இருக்கும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு உத்தரவு இன்றுடன் நிறைவடைகிறது. தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களிலும் இம்மாத இறுதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருக்கும் நிலையில் அது தேசிய ஊரடங்காக நாடு முழுவதும் நீட்டித்து மத்திய அரசு இன்று அறிவிப்பு வெளியிடும் என்று தெரிகிறது.
இந்த நிலையில் இன்று காலை 10 மணியளவில் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாட இருப்பதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்திருக்கிறது. ஊரடங்கு நீட்டிப்பு குறித்தும் இனி மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாகவும் பிரதமர் கூறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் எடுத்து வரும் தீவிர நடவடிக்கைகள் குறித்து தனது உரையில் பிரதமர் குறிப்பிடக்கூடும். மேலும் பல்வேறு இடங்களில் ஊரடங்கை பின்பற்றாமல் மக்கள் வெளியில் கூட்டமாக திரளவதை காண முடிகிறது. அதில் இருக்கும் பாதிப்புகள் குறித்தும் பிரதமர் மோடி மக்களுக்கு எடுத்துரைப்பார் என்று தெரிகிறது.
கொரோனாவின் தீவிரம் இந்தியாவில் அதிகரித்ததில் இருந்து பிரதமர் 3 முறை மக்களிடம் உரையாற்றி இருக்கிறார். முதலில் மார்ச் 22ம் தேதி அமல்படுத்தப்பட்ட ஒரு நாள் சுய ஊரடங்கு குறித்து பேசினார். பின் 23ம் தேதி இரவு நாட்டு மக்களிடம் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நள்ளிரவு முதல் இந்தியாவில் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவித்தார். தொடர்ந்து ஏப்ரல் 3ம் தேதி காலையில் உரையாற்றிய பிரதமர் மோடி ஊரடங்கின் இறுதி நாளான இன்று 4வது முறையாக பேச இருக்கிறார்.