மே 29 வரை ஊரடங்கு நீட்டிப்பு..! அதிரடி கிளப்பிய தெலுங்கானா முதல்வர்..!

By Manikandan S R SFirst Published May 6, 2020, 7:57 AM IST
Highlights

தற்போது பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் பல மாநிலங்களில் ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்து அரசுகள் ஆலோசித்து வரும் நிலையில் தெலுங்கானாவில் ஊரடங்கை மே 29 ம் தேதி வரை நீட்டித்து முதல்வர் சந்திரசேகர ராவ் உத்தரவிட்டுள்ளார். 

உலக அளவில் பெரும் நாசங்களை விளைவித்து வரும் கொடிய கொரோனா வைரஸ் நோய் இந்தியாவிலும் அசுர வேகம் எடுத்து இருக்கிறது. தினமும் 1500 நபர்களுக்கு மிகாமல் கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு வரும் நிலையில் பலியானவர்களின் எண்ணிக்கையும் கணிசமான அளவில் உயர்ந்து வருகிறது. இன்றைய நிலவரப்படி இந்தியாவில் 49,400 மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தனிமை சிகிச்சையில் வைக்கப்பட்டிருக்கும் நிலையில் கொரோனா நோய்க்கு தாக்கு பிடிக்க முடியாமல் 1,693 பேர் பலியாகி இருக்கின்றனர். நாடுமுழுவதும் கொரோனாவில் இருந்து 12,847 மக்கள் பூரண நலம் பெற்று தங்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஸ்டிராவில் கொரோனா பாதிப்பு 15 ஆயிரத்தை கடந்துள்ளது. அங்கு இதுவரை 15,525 பேர் பாதிக்கப்பட்டு 617 பேர் உயிரிழந்துள்ளனர். அதற்கடுத்தபடியாக குஜராத்தில் 6,245 பேரும், டெல்லியில் 5,104 பேரும், மத்திய பிரதேசத்தில் 3,049 பேரும் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். தமிழகத்தில் நேற்று 508 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,058 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் நாடு முழுவதும் மூன்றாவது முறையாக மே 17ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் பல மாநிலங்களில் ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்து அரசுகள் ஆலோசித்து வரும் நிலையில் தெலுங்கானாவில் ஊரடங்கை மே 29 ம் தேதி வரை நீட்டித்து முதல்வர் சந்திரசேகர ராவ் உத்தரவிட்டுள்ளார். ஊரடங்கின் போது மக்கள் மாலை 6 மணிக்கு முன்பாக அத்தியாவசிய பொருட்களை வாங்கிக்கொண்டு வீடுகளுக்கு சென்று விட வேண்டும் எனவும் அதன்பிறகு வெளியே வந்தால் போலீசார் நடவடிக்கை எடுக்கவும் முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார்.

click me!