
நாட்டில் நிலவும் பணப்பற்றாக்குறையை தீர்ப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், நாள்தோறும் வங்கிகளுக்கு அனுப்பும் பணத்தின் அளவு குறித்து வெளிப்படையாக ரிசர்வ் வங்கி அறிக்கை அளிக்க வெளியிட வேண்டும் என நிதியமைச்சர் ஜெட்லிக்கு அனைத்து இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு மற்றும் அனைத்து இந்திய வங்கி அதிகாரிகள் அமைப்பு கடிதம் எழுதியுள்ளனர்.
அனைத்து இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு மற்றும் அனைத்து இந்திய வங்கி அதிகாரிகள் அமைப்பு சார்பில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது-
பணத்தட்டுப்பாடு
கடந்த மாதம் 8-ந்ததேதி மத்திய அரசு ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்ததில் இருந்து பெரும் பணத்தட்டுப்பாடு நாட்டில் நிலவுகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். அதனால் வாடிக்கையாளர்களும், வங்கி ஊழியர்களும், அதிகாரிகளும் எத்தகைய பிரச்சினைகளை சந்தித்து வருகிறோம் என்பதையும் அறிவீர்கள். கடுமையான பணத்தட்டுப்பாட்டு, சில்லறை நோட்டுகள் போதுமான அளவில் இல்லாதது, செயல்பாடாத ஏ.டி.எம்.கள் ஆகியவற்றால் பல நாட்கள் கடுமையான பிரச்சினைகளை நாங்கள் சந்தித்துள்ளோம்.
மறுப்பு
ரூ.100 நோட்டுகளை போதுமான அளவில் தருகிறோம் என்று ரிசர்வ் வங்கி கூறுகிறது. ஆனால், அந்த நோட்டுகள் எல்லாம் மிகவும் அழுக்காகவும், மோசமான நிலையில் இருப்பதால், வாடிக்கையாளர்கள் அதை வாங்க மறுக்கிறார்கள்.
வெளிப்படையாக
ஆனால், ரிசர்வ் வங்கியோ, போதுமான அளவில் பணம் வங்கிகளுக்கு அனுப்பி இருக்கிறோம் என்று ஊடகங்களுக்கு நாள்தோறும் வெளிப்படையாக அறிக்கை வெளியிட்டு வருகிறது. ஆனால், உண்மை என்பது வேறு. ரிசர்வ் வங்கி போதுமான அளவில் பணம் அனுப்புகிறது, வங்கிகள் தான் கொடுக்க மறுக்கிறது என மக்கள் நினைத்து வருகிறார்கள்.
ஆதலால், நாள்தோறும் வங்கிகளுக்கு எவ்வளவு பணத்தை அளிக்கிறோம், சப்ளை செய்கிறோம் என்பதை ரிசர்வ் வங்கி நாள்தோறும் வெளிப்படையாக அறிக்கை வெளியிட வேண்டும்.
பாதுகாப்பு
வங்கிகளிடம் பணம் இல்லை என்று தெரிந்தாலும், சில மக்கள் ஆத்திரமடைந்து, வங்கி அதிகாரிகளை தாக்கும் சம்பவங்களும், வங்கிகளை பூட்டும் சம்பவங்களும் நடந்து வருகின்றன. ஆதலால், வங்கி அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் போதுமான போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.