போன மாசம் மழை, வெள்ளம் !! இந்த மாசம் கடும் வறட்சி !! கேரளாவை வாட்டி எடுக்கும் வெயில் ….

By Selvanayagam PFirst Published Sep 19, 2018, 8:19 PM IST
Highlights

கடும் வெள்ளம் மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட கேரளாவில் வெப்பம் அதிகமாக காணப்படுவதால் அங்குள்ள  ஏரிகள்  மற்றும் குளங்கள் வறண்டு காணப்படுகின்றன. கடந்த ஒரு வாரமாக அங்கு வாட்டி வதைக்கும் வெயிலால் நீர் நிலைகளில் உள்ள தண்ணீர் கிடுகிடுவென வற்றத் தொடங்கியுள்ளது.

கடந்த மாதம்  கேரள மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக அங்கு மக்கள் அவதிக்குள்ளானார்கள். தற்போது அங்கு நிவாரண பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில், தற்போது, அங்கு வெயிலின் தாக்கம் காரணமாக வெப்பம் அதிகரித்து வருகிறது.

மாநிலத்தில் மலை பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கனமழையால் பாதிக்கப்பட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதயிலும் தற்போது, வறட்சி போன்ற நிலை ஏற்பட்டுள்ளதாக மலையாள நாழிதள்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த 15 நாளில் இடுக்கி அணையின் நீர்மட்டம் 20 அடி சரிந்துள்ளது. பல அணைகளிலும் நீர்மட்டம் குறைந்து வருகிறது. அதிகரிக்கும் வெப்பம் காரணமாக விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

கோடை காலம் துவங்குவதற்கு முன்னர், வெப்பம் அதிகரித்து, வறட்சி போன்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது மக்களை கவலையடைய செய்துள்ளது. மழைகாலங்களில் வெள்ளநீர் சூழ்ந்து காணப்பட்ட வயல்வெளிகள், தற்போது, பல இடங்களில், காய்ந்து வெடித்து காணப்படுகின்றன. மாறி வரும் இயற்கை குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மூணாறில் கடந்த மாதம் வரலாறு காணாத வகையில் கன மழை பெய்தது. கடந்த மாதம்  261 செ.மீ., மழை பதிவாகி பேரழிவு ஏற்பட்டது.மூணாறில் மூன்று ஆறுகள் சங்கமிக்கின்றன. இதில் கன்னியாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், கடைகள் மற்றும் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது.மழை குறைந்து,

ஆனால் செப்டம்பர் , 1 முதல் வெயில் சுட்டெரிக்கிறது. வழக்கமாக, இதுபோன்ற நிலை, நவம்பரில் நிலவும். வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஒரு மாதத்தில் அதன் சுவடு தெரியாத வகையில் ஆறுகள் வறண்டு விட்டன.

இதனால், குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது. மூணாறுக்கு குடிநீர் ஆதாரமாக உள்ள குட்டியாற்றில் நீர் வரத்து குறைந்ததால், காலனி உட்பட பல்வேறு பகுதிகளுக்கு, கடந்த ஒரு மாதமாக குடிநீர் வினியோகம் இல்லை என,அதிகாரிகள் தெரிவித்தனர்.

click me!