சன்னிதானத்துக்குள் நுழைந்த இளம் பெண்கள்….. சூடான கேரளா !! இன்று முழு அடைப்பு போராட்டம் !!

By Selvanayagam PFirst Published Jan 3, 2019, 7:23 AM IST
Highlights

இரண்டு பெண்கள் சபரிமலைக்கு சென்று சாமி தரிசனம் செய்த விவகாரத்தில் கேரளாவில் கடும் போராட்டங்கள் கிளம்பியுள்ள நிலையில் இன்று மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

சபரிமலை அய்யப்பன் கோவிலில், இதுவரை இல்லாத வகையில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களையும் அனுமதித்து உச்சநீதிமன்றம்  கடந்த செப்டம்பர் மாதம் 28-ந் தேதி உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்று வருகிறது. பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில் மாநிலத்தில் உள்ள இடதுசாரி அரசு உறுதியாக  இருந்தது. 

உச்சநீதிமன்ற உத்தரவிற்கு பின்னர் கோவில் திறக்கப்பட்ட போது பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றதால் அவர்கள் செல்ல முடியவில்லை.  பெண்களையும் அனுமதிப்பதற்கு எதிராக காங்கிரஸ், பாஜக , ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்து அமைப்புகள் தீவிரமாக போராட்டம் நடத்தி வருகின்றன. 

இந்த நிலையில், கோழிக்கோட்டை சேர்ந்த பிந்து  மற்றும் மலப்புரத்தை சேர்ந்த கனகதுர்கா ஆகிய 2 பெண்கள் நேற்று  அதிகாலையில் சபரிமலை அய்யப்பனை தரிசித்தனர். இந்த சம்பவத்தை முதலமைச்சர்  பினராயி விஜயனும் உறுதி செய்தார். 

இதையடுத்து சபரிமலை கோவிலுக்கு பெண்கள் சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது.  தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள தலைமை செயலகத்துக்கு வெளியே பாஜக கண்டன பேரணி நடத்தினர். இதில் வன்முறை வெடித்தது. ஊடகத்தினர் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர். கொல்லத்தில் நடந்த போராட்டத்திலும் வன்முறை அரங்கேறியது.

இந்த நிலையில், சபரிமலையில் பெண்கள் தரிசனம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கேரளா முழுவதும் இன்று   முழு அடைப்பு போராட்டம் நடத்த சபரிமலை கர்ம சமிதி அமைப்பு அழைப்பு விடுத்து உள்ளது. இதில் பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் ஈடுபட்டுள்ளன.

அதே நேரத்தில் முழு அடைப்பு போராட்டத்தை தடுக்க மாநிலம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

click me!