விஜயமல்லையா பாணியில் லண்டன் சென்றார் கார்த்தி சிதம்பரம்: சம்மன் கொடுக்க வந்த சி.பி.ஐ அதிகாரிகள் ஏமாற்றம்!

First Published May 18, 2017, 9:37 PM IST
Highlights
Karti Chidambaram leaving country


முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் இன்று அதிகாலை விமானம் மூலம் லண்டன் சென்றதால், சம்மன் கொடுப்பதற்காக இன்று அவர் வீட்டுக்கு வந்த சி.பி.ஐ அதிகாரிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

ப.சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்த பொது, அவரது மகன் கார்த்தி சிதம்பரம், தமது செல்வாக்கை பயன்படுத்தி, நிர்ணயிக்கப்பட்ட வரம்புக்கு மீறி, ஐ என் எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு அந்நிய முதலீட்டை பெற்று தந்ததாக  புகார் கூறப்பட்டது.

அந்த புகாரின் அடிப்படையில், ப.சிதம்பரம், அவர் மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோரின் வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட 14 இடங்களில், சி.பி.ஐ அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.

ஆனால், இந்த சோதனையில் பணமோ, ஆவணங்களோ ஏதாவது கைப்பற்றப்பட்டதா என்பது குறித்து, சி.பி.ஐ தரப்பில் இருந்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

மேலும், ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரம் மீது குறைந்த பட்சம் நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்த சி.பி.ஐ  முடிவு செய்திருந்தது.

கார்த்திக் சிதம்பரத்திற்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளை மேற்கோள் காட்டி, அவர் மீது நான்கு பிரிவுகளில் வழக்குத் தொடுக்க அமலாக்க பிரிவும் ஏற்கனவே பரிந்துரை செய்திருந்தது. 

இந்நிலையில், இன்று காலை சம்மன் வழங்குவதற்காக, கார்த்தி சிதம்பரத்தின் வீட்டுக்கு சி.பி.ஐ அதிகாரிகள் சென்றனர்.

ஆனால், அதற்கு முன்னதாக இன்று காலை 6 மணிக்கே அவர், விஜயமல்லையா பாணியில், கார்த்தி சிதம்பரம் தமது நண்பர் ஒருவருடன், விமானம் மூலம் லண்டன் சென்று விட்டார்.

இதனால், சம்மன் கொடுக்க சென்ற சி.பி.ஐ தரப்பினர் ஏமாற்றம் அடைந்தனர். இதையடுத்து, சி.பி.ஐ தரப்பில், இனி என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பது குறித்து  இதுவரை எந்த  தகவலும்  வெளியாகவில்லை.

click me!