அதிகரிக்கும் கொரோனா..ஜிப்மர் மருத்துவமனையில் புற நோயாளிகள் பிரிவு மூடல்..? ஆளுநர் தமிழிசையின் புது உத்தரவு..

By Thanalakshmi VFirst Published Jan 16, 2022, 9:44 PM IST
Highlights

புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் பொதுமக்களுக்கான மருத்துவ சேவை எந்த வகையிலும் பாதிக்கப்படாத வகையில் வழிமுறைகளைக் கையாள வேண்டும் எனவும் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவை மூடக்கூடாது எனவும் ஆளுநர் தமிழிசை உத்தரவிட்டுள்ளார்.
 

புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துவருகிறது. குறிப்பாக புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு பிறகு கொரோனா தொற்று பரவல் வேகமெடுத்துள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் புதிதாக 1,160 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இதில் புதுச்சேரி-974, காரைக்கால்-129, ஏனாம்-17, மாஹே-40 என மொத்தமாக 1,160 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. குறைந்த மக்கள் தொகைகொண்டுள்ள புதுச்சேரியை பொறுத்த வரை இந்த கொரோனா பாதிப்பு விகிதம் அதிகமாகும்.

இதுபோன்று தமிழகத்தில் இன்று  ஒரே நாளில் 23,975 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரு நாள் பாதிப்பு 23,989 ஆக இருந்த நிலையில் இன்றைய கொரோனா உறுதியானவர்களின் எண்ணிக்கை 14 குறைந்து 23,975 ஆக பதிவாகியுள்ளது. 1,40,720 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 23,975 ஆக உள்ளது. ஜனவரி 1 ஆம் தேதி வெறும் 1489 ஆக இருந்த ஒரு நாள் கொரோனா பாதிப்பு இன்று 23,975 ஆக அதிகரித்துள்ளது. 

தமிழகம் மற்றும் புதுச்சேரி அசூர வேகத்தில் பரவும் கொரோனா தொற்றை கட்டுபடுத்த அரசுகள் பல்வேறு கட்டுபாடுகளை விதித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.  புதுச்சேரியில் உணவகங்கள், கலையரங்கங்கள், மதுபானக் கூடங்களிலும் 50% மட்டுமே அனுமதிப்படுவர். சலூன், அழகு நிலையங்கள், ஸ்பாக்களில் 50% வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. திரையரங்குகள், மால்கள், வணிக நிறுவனங்களில் 50% பேருக்கு மட்டுமே அனுமதித்து செயல்படலாம் போன்ற கட்டுபாடுகள் நடைமுறையில் உள்ளன. 

இந்நிலையில் புதுச்சேரி மத்திய அரசு நிறுவனமான ஜிப்மருக்கு புதுச்சேரி மட்டுமில்லாமல் தமிழகப்பகுதிகளில் இருந்து ஏராளமானோர் சிகிச்சைக்காக வருவார்கள். இச்சூழலில் வரும் 18ம் தேதி முதல் தொலைபேசி மருத்துவ ஆலோசனை சேவைகளை தொடங்க முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. தொலைபேசி எண்ணில் நோயாளிகள் பேசி முன்பதிவு செய்தால் ஒவ்வொரு துறையிலும் 50 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று முடிவு எடுத்துள்ளது. ஏற்கெனவே இம்முறையால் மக்கள் கடும் அவதிக்கு ஆளான சூழலில் தற்போது மீண்டும் இம்முறை அமலாக மக்கள் கடும் அதிருப்தி தெரிவித்தனர்.

கொரோனா சூழலில் தொடர் சிகிச்சையில் இருக்கும் பலரும் ஜிப்மரின் இம்முடிவுகளால் கடும் பாதிப்புக்கு உள்ளாவதாக புகார் தெரிவிக்கத்தொடங்கினர். இதையடுத்து துணைநிலை ஆளுநர் தமிழிசை, ஜிப்மர் நிர்வாகத்தைத்தொடர்பு கொண்டு விவரங்களை கேட்டறிந்தார். அதற்கு ஜிப்மர் நிர்வாகத்தரப்பு, "ஜிப்மர் மருத்துவமனையில் புற நோயாளிகள் சிகிச்சைப் பிரிவு முற்றிலுமாக மூடப்படவில்லை. ஆனால் கொரோனா நோயாளிகளுக்கு அதிக கவனம் செலுத்த வேண்டி இருப்பதனால், ஒரு துறைக்கு 50 பேர் விதம் முன்பதிவு செய்து வரும் நோயாளிகள் அனுமதிக்கப்படுவர். சாதாரண நோய் அறிகுறி உள்ளவர்கள் தொலைமருத்துவ (Tele-Medicine) முறையில் சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம்" என்று குறிப்பிட்டது.

இதையடுத்து ஜிப்மர் நிர்வாகத்துக்கு ஆளுநர் தமிழிசை பிறப்பித்துள்ள உத்தரவில், " பொதுமக்கள் பாதிப்பு அடையும் அளவிற்கு புறநோயாளிகள் சிகிச்சைப் பிரிவை மூடக்கூடாது. பொதுமக்களுக்கான மருத்துவ சேவை எந்த வகையிலும் பாதிக்கப்படாத வகையில் வழிமுறைகளைக் கையாள வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

click me!