காஷ்மீரில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர். 17 பேர் காயமடைந்து அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காஷ்மீரில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர். 17 பேர் காயமடைந்து அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காஷ்மீர் மாநிலத்தின் லோரான் பகுதியில் இருந்து பூஞ்ச் பகுதிக்கு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. பூஞ்ச் அருகே மலைப்பகுதியில் சென்றுக்கொண்டிருந்த போது பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனையடுத்து 100 மீட்டர் பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் சம்பவ இடத்திலேயே 6 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து தொடர்பாக தகவல் அறிந்ததும் விரைந்து வந்த போலீசார் மீட்புபணியில் ஈடுபட்டனர். அப்போது காயம் அடைந்து உயிருக்கு போராடிய மேலும் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் 17 பேர் காயமடைந்து மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் பலி 13 ஆக உயர்ந்தது.
இதில் 4 பேர் பெண்கள். காயம் அடைந்தவர்களில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருந்ததை அடுத்து அவர்கள் ஜம்முவில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு ஹெலிகாப்டர் மூலம் கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.