இனி பெரிய ராக்கெட்டுகளை ஈஸியா ஏவலாம்.. ஸ்ரீஹரிகோட்டாவில் ரெடியாகும் இஸ்ரோவின் 3வது ஏவுதளம்!

Published : Dec 28, 2025, 03:49 PM IST
Sriharikota

சுருக்கம்

இஸ்ரோ (ISRO) ஸ்ரீஹரிகோட்டாவில் தனது மூன்றாவது ராக்கெட் ஏவுதளத்தை அமைக்கவுள்ளது. 12,000 கிலோவுக்கும் அதிகமான எடை கொண்ட கனரக செயற்கைக்கோள்களை ஏவுவதற்காக இந்த தளம் உருவாக்கப்படுகிறது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO), ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் தனது மூன்றாவது ராக்கெட் ஏவுதளத்தை அமைப்பதற்கான பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.

இதற்கான சரியான உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்கக்கூடிய நிறுவனங்களை அடையாளம் காணும் பணி தற்போது நடைபெற்று வருவதாக மூத்த விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.

ஏன் இந்த 3-வது ஏவுதளம்?

தற்போது இஸ்ரோவிடம் இரண்டு ஏவுதளங்கள் செயல்பாட்டில் உள்ளன. இருப்பினும், வருங்காலத் தேவைகளுக்காக இந்த புதிய தளம் அவசியமாகிறது. குறிப்பாக, 12,000 முதல் 14,000 கிலோவுக்கும் அதிக எடையுள்ள பிரம்மாண்ட செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த பெரிய ரக ராக்கெட்டுகள் தேவைப்படுகின்றன. இத்தகைய கனரக ராக்கெட்டுகளை ஏவுவதற்கு ஏற்றவாறு அதிநவீன உள்கட்டமைப்புடன் இந்த மூன்றாவது தளம் வடிவமைக்கப்பட உள்ளது.

இது குறித்து சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் இயக்குநரும், முதன்மை விஞ்ஞானியுமான பத்மகுமார் இ.எஸ். கூறுகையில், அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள் இந்த மூன்றாவது ஏவுதளத்தை உருவாக்கி, நிறுவி, செயல்பாட்டுக்குக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார். இதற்கான முதற்கட்ட கொள்முதல் பணிகள் மற்றும் தகுதியான நிறுவனங்களைத் தேர்வு செய்யும் பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன என்றும் அவர் குறிப்பிட்டார்.

சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் வரலாறு

சென்னையிலிருந்து சுமார் 135 கி.மீ தொலைவில், 175 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஸ்ரீஹரிகோட்டா தளம், இந்தியாவின் முதன்மையான விண்வெளி முனையமாகத் திகழ்கிறது.

இஸ்ரோவின் முன்னாள் தலைவர் பேராசிரியர் சதீஷ் தவான் நினைவாக, கடந்த 2002-ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ஆம் தேதி இந்த மையத்திற்கு 'சதீஷ் தவான் விண்வெளி மையம்' எனப் பெயர் சூட்டப்பட்டது.

இந்த மையம் 1971-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 'ரோகிணி-125' என்ற சிறிய ரக ராக்கெட்டை ஏவியதன் மூலம் தனது பணியைத் தொடங்கியது.

தற்போது சர்வதேசத் தரத்திலான உள்கட்டமைப்பைக் கொண்டுள்ள இந்த மையம், தொலை உணர்வு, தகவல் தொடர்பு மற்றும் அறிவியல் ஆய்வுகளுக்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி வருகிறது. இந்த புதிய ஏவுதளம் அமைப்பதன் மூலம், விண்வெளித் துறையில் இந்தியாவின் பலம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வரலாறு படைத்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு! இந்தியக் கடற்படை நீர்மூழ்கிக் கப்பலில் பயணம்!
உலகின் பழமையான மொழி.. இந்தியாவில் அனைவரையும் ஈர்க்கும் தமிழ்.. பிரதமர் மோடி பெருமிதம்!