புதுச்சேரியில் மின்வாரியத்தை தனியார் மயமாக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் பெரும்பாலான பகுதிகளில் மின் தடை ஏற்பட்டு சரி செய்யப்படாத நிலையில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
புதுச்சேரி மின்சார வாரியத்தை தனியார் மயமாக்கும் வகையில் டெண்டர் விடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மின்துறை ஊழியர்கள் புதன் கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் புதுவையில் பல்வேறு பகுதிகளில் மின்வெட்டு, ஏற்பட்டு அதனை சரிசெய்ய முடியாத நிலை உள்ளது. இதன் காரணமாக பள்ளி மாணவர்கள், குழந்தைகள் உள்பட பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் முத்தியால்பேட்டை வாழைக்குளம் பகுதியில் அரசு அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று காலை 8 மணிக்கு தடைபட்ட மின்சாரம் மாலை 6 மணிக்கு மேலாகியும் மின்வினியோகம் வழங்கப்படவில்லை. இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் அதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்கிடையே குடியிருப்புவாசிகள் இரவு சாலையில் அமர்ந்து திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் மின்வினியோகம் வழங்கப்படும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்தனர். இந்த போராட்டம் இரவு வரை நீடித்தது.
PMGKAY: இலவச உணவுதானியம் வழங்கும் PMGKAY திட்டம் டிசம்பர் வரை நீட்டிப்பு: ரூ.45 ஆயிரம் கோடி செலவு
இதேபோல் வில்லியனூர், சுல்தான் பேட்டை, பூமியான் பேட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் மின் தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட திடீர் சாலை மறியல் போராட்டத்தால் வாகன ஓட்டிகள், பணி முடிந்து வீடு செல்பவர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனர்.