கைது பீதி... உச்சநீதிமன்றத்திற்கு விரைந்த ப.சிதம்பரம்..!

By vinoth kumarFirst Published Aug 20, 2019, 5:30 PM IST
Highlights

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததையடுத்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுத்தாக்கல் செய்துள்ளார். 

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததையடுத்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுத்தாக்கல் செய்துள்ளார். 

கடந்த 2007-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின் போது மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்து வந்தார். ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தில் ரூ.305 கோடி அந்நிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதில், முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த அனுமதி விவகாரத்தில் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான நிறுவனத்திற்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. 

இது தொடர்பாக ப.சிதம்பரம், அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம், ஐ.என்.எக்ஸ். மீடியா இயக்குநர்கள் மற்றும் இந்திராணி முகர்ஜி உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை, சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது விசாரணை நடத்தி வந்தனர். இதனையடுத்து, இந்த வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க ப.சிதம்பரம்முன்ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதன்படி, ப.சிதம்பரத்தை கைது செய்யக்கூடாது என அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ.க்கு டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது. அதைத் தொடர்ந்து, இதற்கான தடை, அவ்வப்போது நீடிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையில் ப.சிதம்பரம் விசாரணைக்கு உரிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் முறையிட்டன. எனவே அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்க வலியுறுத்தின.

 இந்நிலையில், முன்ஜாமீன் கோரி ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும், மேல்முறையீடு செய்ய ப.சிதம்பரத்துக்கு நீதிமன்றம் 3 நாள் அவகாசம் அளித்திருந்தது.. இதனிடையே, எந்நேரமும் தாம் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் ப.சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். 

click me!