இண்டிகோ விமான நிறுவனத்தில் சாதிய பாகுபாடு: பயிற்சி விமானி புகார்

Published : Jun 23, 2025, 02:42 PM IST
IndiGo airlines

சுருக்கம்

இண்டிகோ பயிற்சி விமானி சரண் குமார், சக ஊழியர்கள் சாதிய ரீதியாக பாகுபாடு காட்டியதாகவும், அவதூறாகப் பேசியதாகவும் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, குற்றம் சாட்டப்பட்ட மூவர் மீதும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இண்டிகோ விமான நிறுவனத்தில் பயிற்சி விமானியாக இருக்கும் சரண் குமார் என்பவரை, அவரது மூன்று சக ஊழியர்கள் சாதிய ரீதியாக பாகுபாட்டுடன் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

"திரும்பச் சென்று செருப்பு தைக்கச் சொல்" போன்ற அவதூறான வார்த்தைகளையும் அவர்கள் பயன்படுத்தியதாக சரண் குமார் குற்றம்சாட்டியுள்ளார். இழிவான பெயர்களில் அழைத்து, விமானத்தின் காக்பிட்டில் அமரவோ அல்லது விமானத்தை இயக்கவோ தகுதியில்லை என்று கூறியதாகவும் சரண் குமார் கூறியுள்ளார்.

அவதூறு குற்றச்சாட்டு:

சரண் குமாரின் தந்தை அசோக் குமார், குற்றம் சாட்டப்பட்ட தபஸ் டே, மனிஷ் சஹானி மற்றும் ராகுல் பாட்டீல் ஆகியோர் மீது புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில், "சக ஊழியர்கள் முன்னிலையில், 'உனக்கு விமானம் ஓட்ட தகுதி இல்லை, உன் மூதாதையர் தொழில் செருப்பு தைப்பது, நீ போய் செருப்பு தை, என் காலணியை நக்குவதற்குக்கூட நீ தகுதியற்றவன்' போன்ற சாதிய மற்றும் ஆபாசமான வார்த்தைகளைக் கூறியுள்ளனர். இவை சட்டப்படி கடுமையான குற்றங்களாகும்" என்று அசோக் குமார் தன் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், "ஒரு **** என் முன்னால் உட்கார்ந்து விளக்கம் கேட்க தைரியம் உள்ளதா? இந்த கட்டிடத்தில் ஒரு வாட்ச்மேனாக இருக்கக்கூட உனக்குத் தகுதி இல்லை, நீ விளக்கம் கேட்கிறாயா?" என்றும் அந்தப் புகாரில் அசோக் குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

வழக்கு பதிவு மற்றும் விசாரணை:

சரண் குமாரின் புகாரின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்ட மூவர் மீதும் பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமை தடுப்பு) சட்டம் மற்றும் பாரதிய நியாய சம்ஹிதா (BNS) ஆகியவற்றின் கீழ் தொடர்புடைய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்ச்சியான துன்புறுத்தல்:

தனது மகன் சரண் குமார், சக ஊழியர்களால் தொடர்ச்சியான மற்றும் திட்டமிட்ட துன்புறுத்தல் மற்றும் பாகுபாடுகளுக்கு உள்ளானார் என்றும் அசோக் குமார் தெரிவித்துள்ளார். சாதியை வெளிப்படையாகக் குறிப்பிட்டு, அவரை அவமானப்படுத்தும் நோக்கத்துடன் நடந்துகொண்டதாகவும், பட்டியல் சாதியைச் சேர்ந்தவன் என்பதற்காகவே கண்ணியக் குறைவாக நடத்தப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், சரண் குமார் எந்த தவறும் செய்யாத போதிலும், சம்பளக் குறைப்புகள், சரியான காரணம் இல்லாமல் விடுப்பு கழித்தல், பிற ஊழியர்களுக்குக் கிடைக்கும் சலுகைகள் சரண் குமாருக்கு மட்டும் ரத்து செய்யப்பட்டதாகவும், ராஜினாமா செய்ய நிர்பந்திக்கும் ஒரு கருவியாக எச்சரிக்கை கடிதம் வழங்கப்பட்டதாகவும் அசோக் குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டுகள்:

இண்டிகோ ஏர்லைன்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நெறிமுறைகள் குழுவிடம் சரண் குமார் இந்த விஷயத்தைத் தெரிவித்தபோதிலும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் பாதிக்கப்பட்டவரின் தந்தை தெரிவித்துள்ளார்.

"இந்த அநீதியை நிவர்த்தி செய்யவோ அல்லது எனது கண்ணியம் மற்றும் உரிமைகளைப் பாதுகாக்கவோ எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை" என்று அசோக் குமார் வேதனை தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், சரண் குமார் எழுப்பியுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து காவல்துறை மேலதிக விசாரணையைத் தொடங்கியுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இண்டிகோ விமானம் ரத்து.. திருமண வரவேற்பில் வீடியோ மூலம் கலந்துகொண்ட புதுமணத் தம்பதி!
பீகார் SIR பணியில் தில்லுமுல்லு.. நீக்கப்படாத 5 லட்சம் போலி வாக்காளர்கள்!