
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,771 பேர் கொரோனாவால் உறுதி செய்யப்பட்டதையடுத்து மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,48,315ஆக அதிகரித்துள்ளது. இதனையடுத்து, உலகளவில் ரஷ்யாவை மிஞ்சி இந்தியா 3வது இடத்திற்கு முன்னேற உள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருப்பதாலும், பரிசோதனைகளை அதிகரிப்பதாலும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்கிறது. அதேபோல், உயிரிழப்பும் மற்றும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது.
இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கடந்த 24 மணி நேரத்தில் 22,771 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 6,48,315 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 442 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கையும் 18,655 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 3,94,277 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 2,35,433 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தியாவில் அதிகபட்ச பாதிப்பில் தொடர்ந்து மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் 1,92,990 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 8,376 பேர் உயிரிழந்துள்ளனர். 2வது இடத்தில் உள்ள தமிழகத்தில் 1,02,721 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,385 பேர் உயிரிழந்துள்ளனர். 3வது இடத்தில் டெல்லியில் 94,695, 4வது இடத்தில் உள்ள குஜராத்தில் 34,600 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் பாதிக்கப்பட்டவர் பட்டியலில் ரஷ்யாவை மிஞ்சி இந்தியா 3வது இடத்திற்கு முன்னேற உள்ளது குறிப்பிடத்தக்கது.