
ஜம்மு-காஷ்மீர் எல்லையில் தொடர் அத்துமீறலில் ஈடுபட்டுள்ள பாகிஸ்தான் படைகளுக்கு, இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்ததை எதிர்கொள்ள முடியாமல், தாக்குதலை நிறுத்துமாறு அந்நாடு கேட்டுக் கொண்டுள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு. மனோகர் பாரிக்கர் தெரிவித்தார்.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஜம்மு-காஷ்மீர் எல்லையில் உள்ள இந்திய நிலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் மீது, பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதற்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இதனிடையே கோவா தலைநகர் Panaji-ல் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு. மனோகர் பாரிக்கர், இந்திய ராணுவம் நடத்திய சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தான் ராணுவம் கோழைத்தமான முறையில் ஜம்மு-காஷ்மீர் எல்லையில் தாக்குதல் நடத்தி வருவதாக தெரிவித்தார்.
இந்திய ராணுவத்தினரின் தக்க பதிலடியால், எல்லையில் கடந்த 2 நாட்களாக பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்துவதை நிறுத்தி உள்ளதாகவும் மேலும் அவர் தெரிவித்தார். இந்தியாவின் அதிரடித் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல், கடந்த சில நாட்களூக்கு முன்பு பாகிஸ்தான் அதிகாரிகள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, தாக்குதலை நிறுத்துமாறு மன்றாடி கேட்டுக்கொண்டதாகவும் திரு. மனோகர் பாரிக்கர் தெரிவித்தார்.