யாருக்குமே கிடைக்காத அந்த ரோஸ் கலர் ரூவா நோட்டு... சேகர் ரெட்டிக்கு மட்டும் கத்தை கத்தையா எப்டிய்யா கிடைச்சது...?

First Published Oct 25, 2017, 6:06 PM IST
Highlights
how was sekar reddy got new 2 thousand rupee note on demonetisation time


சென்ற வருடம் நவம்பர் மாதம் 8ம் தேதி ஒரு திடீர் அறிவிப்பை அளித்து, நாட்டு மக்களுக்கு மயக்கமே வரச் செய்தார் பிரதமர் மோடி.  ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்றும், அவற்றை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என்றும்  செய்திகளில் சொன்னபோது, பெரும்பாலான மக்களும் அதை முதலில் நம்பவே மறுத்தனர். 

அதன் பின்னர் அந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகளுக்குப் பதிலாக, ரூ.2 ஆயிரம் நோட்டு புதிதாக அறிமுகப் படுத்தப் பட்டது. அந்த ஒரு நோட்டை வங்கிகளில் ஏடிஎம் மெஷின்களில் கால் கடுக்க மணிக்கணக்கில் காத்திருந்து, தங்களின் அன்றாடத் தேவைகளுக்கே அவற்றை எடுக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டது. 

ரிசர்வ் வங்கியில் இருந்து அனைத்து வங்கிகளுக்கும் அந்த 2000 ரூபாய் நோட்டு அனுப்பப் பட்டது என்று கூறப்பட்டாலும், அப்போது பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டது என்பதே உண்மை. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமப்பட்டு, அல்லாடினர். ஆனால், அதனைத் தொடர்ந்து, சில வங்கிகளில் பெறப்பட்ட தகவல்கள் அடிப்படையில், திடீர் சோதனைகளை சில இடங்களில் நடத்தினர் மத்திய உளவுப் பிரிவினர். 

அந்நேரத்தில், தமிழகத்தில் சேகர் ரெட்டி வீட்டில்,  ரூ.33 கோடிக்கு புதிய ரூ.2000 கத்தை கத்தையாகக் கிடைத்தன. இந்தத் தகவலைக் கேட்டதும் பொதுமக்கள் பெரிதும் அதிர்ந்தனர். நமக்கு ஒத்தை நோட்டு கிடைக்கிறதே குதிரைக் கொம்பா இருக்கும் போது, இவங்க கிட்ட மட்டும் எப்படி இவ்வளவு நோட்டு என்று வெளிப்படையாகவே புகார் கூறினர். அதைத் தொடர்ந்து பல இடங்களில் இவ்வாறு கத்தை கத்தையாக புதிய ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டன. 

இந்நிலையில், இது குறித்து ரிசர்வ் வங்கியில் போதிய தகவல்கள் இல்லை என்பதால், இந்த வழக்குகளில் போதிய முன்னேற்றத்தைக் காண  சிபிஐ.,யால் இயலவில்லையாம். 

புதிய ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு முதலில் ரிசர்வ் வங்கிக்கும், அதன் பின்னர் அங்கிருந்து மற்ற வங்கிகளுக்கும் அனுப்பப் பட்டு, வங்கிகள் மூலமே பணம் விநியோகிக்கப்பட்டது. இப்படி பாதுகாப்பு மிக்க அரசு அச்சகங்களில் அச்சடிக்கப்பட்டு, ரூபாய் நோட்டுகளின் வரிசை எண்கள் உள்ளிட்ட தகவல்களுடன்தான் ரிசர்வ் வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டன. ரிசர்வ் வங்கி அங்கிருந்து பணக் கிடங்குக்கும், பின் வங்கிகளுக்கும் அவை விநியோகிக்கப்பட்டன. 

இப்படி வங்கிகளுக்கு விநியோகம் செய்வதற்காக, பல்வேறு பணக் கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட அந்த ரூபாய் நோட்டுகள் குறித்த விவரங்களை, அதாவது ரூபாய் நோட்டுகளின் வரிசை எண்கள் உள்ளிட்ட தகவல்களை ரிசர்வ் வங்கி குறித்து வைத்துக் கொள்ளாமல் மொத்த்தமாக அனுப்பியதாம். இந்த அதிர்ச்சித் தகவல் இப்போது சிபிஐயின் விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், சிபிஐ., தாங்கள் மேற்கொண்ட இந்த வழக்குகளில் போதிய அளவில் முன்னேற்றம் காண இயலாமல் தவித்து வருவதாகக் கூறப்படுகிறது. 

click me!