
தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தின் வரலாறு மற்றும் முக்கியத்துவம் குறித்து விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 7 ஆம் தேதி தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாள் மிக முக்கியமானது. ஏனெனில் இது புற்றுநோயின் தீவிர அபாயத்தைப் பற்றி மக்களுக்கு அறிவுறுத்துகிறது. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, மக்கள் மத்தியில் மரணத்தை ஏற்படுத்தும் 2வது கொடிய நோயாக புற்றுநோய் உள்ளது.
புற்றுநோயால் இறக்கும் மக்களின் நிலை இந்தியாவுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. 2020 ஆம் ஆண்டில், இந்தியாவில் 8.5 லட்சம் பேர் புற்றுநோயால் இறந்துள்ளனர். இந்த காரணத்திற்காக, இந்த வகை புற்றுநோயைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தின் வரலாறு:
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் முதன்முதலில் தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தை செப்டம்பர் 2014 ஆம் ஆண்டு அறிவித்தார். அவர் புற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான மாநில அளவிலான இயக்கத்தைத் தொடங்கினார். மேலும் நகராட்சி கிளினிக்குகளில் இலவச பரிசோதனை செய்துக்கொள்ள மக்களை ஊக்குவித்தார். புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள் மற்றும் அதை எவ்வாறு தவிர்ப்பது என்பது பற்றிய சிறு புத்தகமும் அப்போது விநியோகிக்கப்பட்டது.
இந்த கொடிய நோய்க்கு எதிராக நாட்டில் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கை 1975 ஆம் ஆண்டு தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் துவக்கத்துடன் தொடங்கியது. இது நாட்டில் புற்றுநோய் சிகிச்சையை எளிதாக்கும் வகையில் தொடங்கப்பட்டது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு, 1984-85 ஆம் ஆண்டில், புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் தடுப்பதில் கவனம் செலுத்த திட்டத்தின் அணுகுமுறை திருத்தப்பட்டது.
தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தின் முக்கியத்துவம்:
புற்றுநோய் நோய் தொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை அதிகப்படுத்தவும் மற்றும் நடவடிக்கை எடுக்க அரசு உட்பட அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதுமே தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தை தேசிய அளவில் கொண்டாடுவதன் நோக்கம்.