
7 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் வசிக்கும் இந்துக்களை சிறுபான்மையினராக அறிவிக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பாஜகவைச் சேர்ந்த அஷ்வினி உபாத்யாயா, உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
அதில், கடந்த 2011ல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி ஜம்மு காஷ்மீர், மிசோரம், நாகாலாந்து, மேகாலயா, அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், பஞ்சாப் ஆகிய மாநிலங்களிலும், யூனியன் பிரதேசமான லட்சத்தீவிலும், இந்து மதத்தினர் சிறுபான்மையினராக வசிக்கின்றனர்.
இதுவரை, இந்துக்கள் சிறுபான்மையினராக வாழும் இந்த 7 மாநிலங்களிலும் யூனியன் பிரதேசமான லட்சத்தீவிலும் இந்துக்களை சிறுபான்மையினராக அறிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் அப்போதுதான் அவர்களால் சிறுபான்மையினருக்குரிய சலுகைகளை பெறமுடியும் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், 1993ல் மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். இந்த வழக்கில், மத்திய சட்ட அமைச்சகத்தை பிரதிவாதியாக சேர்க்க வேண்டும் எனவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.