ஹரியானா விவகாரம்: நாடாளுமன்றத்தில் ரவிக்குமார் எம்.பி., கவன ஈர்ப்பு நோட்டீஸ்!

Published : Aug 03, 2023, 10:48 AM IST
ஹரியானா விவகாரம்: நாடாளுமன்றத்தில் ரவிக்குமார் எம்.பி., கவன ஈர்ப்பு நோட்டீஸ்!

சுருக்கம்

ஹரியானாவில் விஎச்பி ஆல் நடத்தப்படும் மதவாத வன்முறை தொடர்பாக விவாதிக்க வேண்டும் என நாடாளுமன்ற மக்களவையில்  ரவிக்குமார் எம்.பி., கவன ஈர்ப்பு  நோட்டீஸ் அளித்துள்ளார்

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மூன்று மாதங்களுக்கு மேலாக கலவரம் ஓயாத நிலையில், பாஜக ஆளும் மாநிலமான ஹரியானாவில் மதக் கலவரம் வெடித்துள்ளது. அம்மாநிலத்தின் நூஹ் பகுதியில் பாஜக மாவட்டத் தலைவர் கார்கி கக்கார் என்பவரால் தொடங்கிவைக்கப்பட்ட, விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் பேரணியில் திடீரென இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு வன்முறையில் முடிந்தது. முஸ்லிம்கள் இரண்டு பேரை கொன்ற வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பஜ்ரங் தளத் தலைவர் மோனு மானேசர் அந்த பேரணியில் பங்கேற்பதாக ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானது. இதுவே வன்முறைக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

ஹரியானாவின் நூஹ் பகுதியில் ஏற்பட்ட வன்முறையானது அம்மாநிலம் முழுவதும் பரவியுள்ளது. மேலும், தலைநகர் டெல்லியில் இருந்து 20 கிமீ தள்ளியுள்ள குருகிராம் வரை இக்கலவரம் எட்டியுள்ளது. இதனால், டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

இந்த கலவரத்தில் இதுவரை ஆறு பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக, போலீசார் இதுவரை 116 பேரை கைது செய்துள்ளனர். அத்துடன், 41 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வன்முறை குறித்து ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டார் கூறுகையில், நூஹ் வன்முறை ஒரு சதிச்செயல் என்றும், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், எங்களால் எல்லோரையும் பாதுகாக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மருத்துவ கவுன்சிலிங்: 400 எம்பிபிஎஸ் இடங்களை இழக்கும் தமிழ்நாடு?

இந்த நிலையில், ஹரியானாவில் விஎச்பி ஆல் நடத்தப்படும் மதவாத வன்முறை தொடர்பாக விவாதிக்க வேண்டும் என நாடாளுமன்ற மக்களவையில் விழுப்புரம் எம்.பி., ரவிக்குமார் கவன ஈர்ப்பு  நோட்டீஸ் அளித்துள்ளார்.

அந்த நோட்டீஸில், “ஹரியானாவில் நடந்த வகுப்புவாத மோதல்களில் இதுவரை 6 பேர் பலியாகியுள்ள நிலையில், அண்டை மாநிலங்களுக்கும் வன்முறை பரவி வருகிறது. யாத்ரா அமைப்பாளர்கள் ஆயுதங்களை ஏந்தி வந்தது எப்படி? என  குருகிராம் எம்.பி.யும் மத்திய இணை அமைச்சருமான ராவ் இந்தர்ஜித் சிங் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக விசாரித்த உச்ச நீதிமன்றம், VHP பேரணிகளில் வெறுப்புப் பேச்சு மற்றும் வன்முறையைக் கட்டுப்படுத்துமாறு ஒன்றிய அரசுக்கும் மாநில காவல்துறைக்கும் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையில், வலதுசாரி தீவிரவாத கும்பல்கள், பால்ராவில் உள்ள முஸ்லிம் கிராம மக்களைத் தாக்கி விரட்டியடித்துள்ளனர்.

பெண்களைக் கூட குறிவைத்துத் தாக்கியுள்ளனர், காவல்துறையினர் அதைத் தடுக்காமல் மௌன சாட்சியாக நின்றுள்ளனர். வெறுப்புப் பேச்சுக்கு எதிராக காவல்துறை தானே முன்வந்து  எப்ஐஆர் பதிவு செய்யவேண்டும் என  அக்டோபர் 21, 2022 அன்று உத்தரவிட்டும், ஒன்றிய அரசோ  மாநில அரசுகளோ இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தத் தாக்குதல்கள் அரசியல் உள்நோக்கத்தோடு திட்டமிட்டு நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. விஎச்பியின் வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான வழியைக் கண்டறிய நாடாளுமன்றத்தில் உடனடி விவாதத்தை நடத்துவது மிகவும் முக்கியமானது.” என அந்த நோட்டீஸில்குறிப்பிடப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

பெண்கள் கணக்கில் ரூ.2500 பணம்.. மார்ச் முதல் வாரத்தில் சர்ப்ரைஸ்.. ரூ.20 ஆயிரம் கடனும் தராங்க
ATM வழியே ரேஷன் பொருட்கள்.. நாடு முழுவதும் அமலாகும் பலே திட்டம்..! பொதுமக்கள் குஷி