
மத்திய அரசு நாடுமுழுவதும் சரக்கு மற்றும் சேவை வரியை ஜூலை மாதம் முதல் நடைமுறைப்படுத்தியதில் இருந்து பொருட்களின் விலை குறைந்துள்ளது என விளம்பரம் செய்தாலும், உண்மையாக பொருட்களின் விலை எம்.ஆர்.பி. விலையைக் காட்டிலும் அதிகமாகவே பல கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஜி.எஸ்.டி. வரியை காரணம் காட்டி, ஏராளமான வர்த்தகர்கள், பொருட்களின் விலையை எம்.ஆர்.பி.யைக் காட்டிலும் அதிகமான விலையில் விற்பதாக புகார்கள் வரத்தொடங்கியுள்ளன.
சமீபத்தில் , அடையாரைச் சேர்ந்த எஸ். ராதா என்ற பெண் தனது வீட்டில் உள்ள ஒரு கடையில் பொருட்கள் வாங்கியுள்ளார். அதில் விலை எம்.ஆர்.பி. விலையைக் காட்டிலும் அதிகமாக விலை குறிப்பிடப்பட்டு இருந்தது. அது குறித்து கடைக்காரரிடம் கேட்டபோது, ஜி.எஸ்.டி. வந்ததில் இருந்து பொருட்கள் விலை உயர்ந்துவிட்டது என்றார். ஆனால், ராதா இது குறித்து கடைக்காரரிடம் வாதம் செய்யாமல், வீ்ட்டுக்கு வந்து, ஜி.எஸ்.டி. அலுவலகத்தில் புகார் செய்தார்.
ஜி.எஸ்.டி. வரியை காரணம் காட்டி பொருட்களின் விலையை உயர்த்தி விற்பது தொடர்பாக சென்னையில் உள்ள ஜி.எஸ்.டி. ஆணையர் அலுவலகத்துக்கு நாள்தோறும் ஏராளமான புகார்கள் வந்தவாறு உள்ளன.
இது குறித்து ஜி.எஸ்.டி. கூடுதல் ஆணையர் ராஜிவ் குமாரிடம் கேட்டபோது, “ எங்களுக்கு ஜி.எஸ்.டி. தொடர்பாக புகார் ஏதும் வந்ததும் அது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கிறோம் சமீபத்தில் ஒரு பெண் அளித்த புகாரின் அடிப்படையில் அந்த குறிப்பிட்ட கடைக்கு சென்று கடையின் முதலாளியிடம் முதல்கட்டமாக எச்சரிக்கை விடுத்து, அறிவுரை கூறியிருக்கிறோம். தொடர்ந்து புகார்கள் வரும்நிலையில், அவர் மீது, ஜி.எஸ்.டி. சட்டத்தின் கீழ் நடவடிக்கை பாயும்.
மேலும், ஜி.எஸ்.டி. ஆணையர் அலுவலக்கத்தில் ஜி.எஸ்.டி. குறித்த புகார்களை தெரிவிக்க 28331009 என்ற இலவச உதவி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் வாட்ஸ்அப் எண் மக்களுக்காக வழங்கப்படும். அதில் மக்கள் தங்களின் புகார்களை அளிக்கலாம்” என்றார்.
சமீபத்தில் சென்னையில் உள்ள மகளிர் கல்லூரி ஒன்று ஜி.எஸ்.டி. வரி அறிமுகமான பின், பொருட்களின் விலை குறித்து மக்களிடம் ஆய்வு நடத்தினர். இதில் பங்கேற்ற மக்களில் 89 சதவீதம் பேர், ஜி.எஸ்.டி. வரி நடைமுறைக்கு பின், பொருட்களின் விலை உயர்ந்துவிட்டதாக கருத்து தெரிவித்துள்ளனர்.
சென்னையில் உள்ள மக்களில் அந்த ஆய்வில் பங்கேற்ற 80 சதவீதம் பேர், ஜி.எஸ்.டி. தில்லுமுல்லு குறித்தும், வர்த்தகர்கள் அதிகமான விலையில் பொருட்களை விற்பனை செய்தால் யாரிடம், எந்த அலுவலகத்தில், எந்த அதிகாரியிடம் புகார் தெரிவிப்பது என்பது தெரியவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.