ஆந்திராவில் ஆபரேஷன் பரிவர்த்னா மூலம் இதுவரை 5,964 ஏக்கர் நிலத்தில் பயிரடப்பட்ட கஞ்சா சாகுபடி கண்டுபிடித்து அழித்துள்ளதாக அம்மாநில காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஆந்திராவில் ஆபரேஷன் பரிவர்த்னா மூலம் இதுவரை 5,964 ஏக்கர் நிலத்தில் பயிரடப்பட்ட கஞ்சா சாகுபடி கண்டுபிடித்து அழித்துள்ளதாக அம்மாநில காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஆந்திரா மாநிலத்தில் கஞ்சா சாகுபடியைத் தடுக்கும் விதமாக ஆபரேஷன் பரிவர்த்னா என்ற பெயரில் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். இதன் ஒரு பகுதியாக விசாகப்பட்டினம் மாவட்டத்திற்கு உட்பட்ட ஜி மடுகுலா மண்சல் கிராமத்தில் சேட்லைட் மற்றும் ட்ரோன் உதவிகளுடன் காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது 80 ஏக்கரில் கஞ்சா சாகுபடி செய்யப்பட்டிருந்து கண்டுப்பிடிக்கப்பட்டது. மேலும் இதனை கண்ட காவல்துறையினர் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து 80 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த கஞ்சா செடிகளை காவல்துறையினர் முழுமையாக அழித்தனர். இதுபோன்று நவம்பர் மாத்திற்குள் மாநிலத்தில் கஞ்சா சாகுபடி செய்யப்பட்டுள்ள அனைத்து இடங்களையும் கண்டறிந்து முற்றாக அழிக்கப்படும் என காவல்துறை ஆணையர் வினீத் பிரிஜ்லால் தி தெரிவித்திருந்தார்.
அந்த வகையில் இதுவரை 5,964 ஏக்கர் நிலத்தில் பயிரடப்பட்ட கஞ்சா சாகுபடியை காவல்துறையினர் கண்டுபிடித்து அழித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆபரேஷன் பரிவர்த்தனா என்ற கஞ்சா ஒழிப்பு நடவடிக்கை ஆந்திர மாநிலத்தில் மிகத்தீவிரமாக நடைபெற்று வருகிறது. சேட்டிலைட் படங்கள் மற்றும் ட்ரோன்களின் உதவியோடு காவல்துறை, வருவாய் மற்றும் வனத் துறைகள், ஐடிடிஏ (ஒருங்கிணைந்த பழங்குடியினர் மேம்பாட்டு நிறுவனம்) மற்றும் சிறப்பு அமலாக்கப் பணியகம் (SEB) ஆகியவற்றின் அதிகாரிகள் கஞ்சா சாகுபடியைக் கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆபரேஷன் பரிவர்த்தனா மூலம் 36 நாட்களில் இதுவரை 5,964 ஏக்கர் நிலத்தில் பயிரடப்பட்ட கஞ்சா சாகுபடியை காவல்துறையினர் கண்டுபிடித்து அழித்துள்ளனர். இதுவரை அழிக்கப்பட்ட மொத்த கஞ்சா சாகுபடியின் மதிப்பு மட்டுமே ரூ.1,491 கோடி என்று கூறப்படுகிறது. இந்த நடவடிக்கையை மேலும் தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக ஆந்திர மாநில காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பேசிய சிறப்பு அமலாக்கப் பணியக ஆணையர் வினீத் பிரிஜ்லால் தி, இதேபோன்ற நடவடிக்கைகள் ஏஜென்சிகளால் பகுதியில் அடையாளம் காணப்பட்ட அனைத்து இடங்களிலும் நடத்தப்படும் என்றும் அங்கு கஞ்சா தோட்டம் அல்லது கஞ்சா இருந்தால் அவை படிப்படியாக அழிக்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் கஞ்சா பயிரிடப்படும் பகுதிகளை கண்டறிய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் 10 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதனிடையே தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் ஆந்திராவில் இருந்து சட்ட விரோதமாக கஞ்சா கொண்டு செல்லப்படுகிறது. பல வாகன சோதனைகளில் கஞ்சா சிக்குவதும், அது ஆந்திராவில் இருந்து வருவதும் வாடிக்கையாகவே இருந்தது. இதனை அடுத்தே ஆந்திராவில் கஞ்சா பெருமளவில் பயிரப்படுவதாக தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் அம்மாநில அரசு தீவிர கஞ்சா ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது குறிப்பிட்டுள்ளது.