சுத்தமான இந்தியா எனும் இலக்கை 125 கோடி மக்களின் ஆதரவு இல்லாமல், ஆயிரம் காந்திகள் வந்தாலும், ஒரு லட்சம் மோடி வந்தாலும் நிறைவேற்ற முடியாது. சுத்தம், சுகாதாரத்தை ஒரு போதும் அரசியலாக்க கூடாது என்று பிரதமர் மோடி ஆவேசமாகத் தெரிவித்தார்.
பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் கடந்த 2014ம் ஆண்டு அக்டோபர் 2 ந்தேதியில் “ஸ்வாச் பாரத்” தூய்மை இந்தியா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. 2019ம் ஆண்டு அக்டோபர் 2-ந் தேதிக்குள் திறந்தவெளிக் கழிப்பிடம் இல்லாமல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், தூய்மை இந்தியா திட்டம் தொடங்கப்பட்டு 3 ஆண்டுகள் இன்றுடன் நிறைவு பெற்றது.
இதையொட்டி, மகாத்மா காந்தயின் பிறந்த தினமான இன்று, டெல்லி விஞ்ஞான் பவனிலும் பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர் கூறியதாவது-
நான் கையில் துடைப்பத்தை எடுத்துக்கொண்டு நாட்டை சுத்தப்படுத்தும் தூய்மை இந்தியா திட்டத்தை தொடங்கியபோது, கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.ஆனால், நான் கவலைப்படவில்லை. குழந்தைகள் தங்கள் கைகளை சாப்பிடும் முன் சுத்தமாக வைத்திருக்க வேண்டும், சுகாதாரமில்லா சூழலால் ஏராளமான குழந்தைகள் இறக்கின்றன என்பதைக் கருதி குழந்தைகளுக்கு கைகழுவும் திட்டத்தை அறிமுகப்படுத்தினோம். ஆனால், இதை சில அரசியல் கட்சிகள் கிண்டல் செய்தனர்.
நீங்கள் மோடியை பரிகாசம் செய்வதென்றால், ஆயிரக்கணக்கான பிரச்சினைகள் உள்ளன. சமுதாயத்தை மாற்றும் எந்த விஷயத்திலும் விளையாட்டுத்தனம் செய்யக் கூடாது. அக்டோபர் 2-ந்தேதி குழந்தைகளுக்கு விடுமுறை விட்டு வீணடித்துவிட்டார்கள். ஆயிரம் காந்தி வந்தாலும், ஒரு லட்சம் மோடி வந்தாலும், அனைத்து முதல்வர்கள், அரசுகள் வந்தாலும், தூய்மை இந்தியா திட்டத்தை 125 கோடி மக்கள் ஆதரவு இல்லாமல் நிறைவேற்றவே முடியாது. நாட்டில் உள்ள மக்களின் ஒருங்கிணைந்த பங்களிப்புடன்தான் தூய்மை இந்தியா திட்டத்தை வெற்றியாக்க முடியும்.
மகாத்மா காந்தி காட்டிய வழி ஒருபோதும் வீணானது இல்லை. ஆனால், அந்த வழியை நான் பின்பற்றியபோது ஏராளமான விமர்சனங்கள் வந்தன. இயல்பாகவே ஏராளமான விஷயங்களை நான் சகித்துக்கொள்வேன். என் பொறுப்பு ஏற்றால்போல், நான் சகித்துக்கொள்ள வேண்டும். மெதுவாக, என்னிடம் விமர்சனங்களை சகிக்கும் தன்மை அதிகரித்து வருகிறது. கடந்த 3 ஆண்டுகளாக எந்தவிதமான வெறுப்புமின்றி, நான் தொடர்ந்து சகிப்புத்தன்மையுடன் இருந்து வருகிறேன். மகாத்மா காந்தி காட்டியவழியில் தொடர்ந்து பயணிப்பேன். அது ஒருபோதும் தவறாக அமைந்தது இல்லை.
கடந்த 5ஆண்டுகளுக்கு முன் குழந்தைகள் பள்ளியை சுத்தம் செய்வது குற்றமாகப் பார்க்கப்பட்டு, ஆசிரியர்கள் மீது விமர்சனங்கள் வந்தன. ஆனால், இப்போது, பள்ளியை சுத்தம் செய்ய மாணவர்கள் உதவுகிறார்கள் என்ற நேர்மறையான செய்தி வந்துள்ளது. நாட்டை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபடுவோர்கள் இனி செய்தியாக மாட்டார்கள், சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபடாதவர்களே இனி செய்தியாக மாறுவார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்