
கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார், அம்மாநில சட்டப்பேரவையில் ஆர்.எஸ்.எஸ். பாடலைப் பாடியது பெரும் சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், தன்னை காந்தி குடும்பத்தின் விசுவாசி என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த டி.கே. சிவகுமார், ஆர்.எஸ்.எஸ். பாடல் சர்ச்சை மற்றும் தன் மீதான விமர்சனங்களுக்கு விளக்கமளித்தார். “சில தினங்களுக்கு முன் சட்டப்பேரவையில் ஆர்.எஸ்.எஸ். பாடலில் உள்ள மூன்று வரிகளைப் பாடினேன். ஐ.பி.எல். போட்டி தொடர்பான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் அசோகாவை ஈடுபடுத்தவே அவ்வாறு செய்தேன். எனது நண்பர்கள் சிலர் இதை வைத்து அரசியல் ஆதாயம் பெறவும், பொதுமக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்தவும் முயற்சிக்கின்றனர்” என்று அவர் கூறினார்.
காந்தி குடும்பத்தின் விசுவாசி
“நான் காங்கிரஸ் கட்சிக்காரனாக பிறந்தேன், அப்படியேதான் உயிர் பிரிவேன். காந்தி குடும்பத்தை யாரேனும் கேள்வி கேட்பதை அனுமதிக்க முடியாது. எனது செயல் யாரையேனும் புண்படுத்தி இருந்தால், அதற்காக வருந்துகிறேன். அவர்களிடம் மன்னிப்பு கோருகிறேன். ஆனால், இதை அரசியல் அழுத்தம் காரணமாக நான் செய்யவில்லை. எனது கட்சியில் உள்ள சில சகாக்கள் இது தொடர்பாக வெளிப்படுத்திய கருத்துக்களை நான் விரும்பவில்லை” என்று சிவகுமார் தெரிவித்தார்.
மேலும், “காந்தி குடும்பத்தினரே எனது தெய்வம். நான் அவர்களின் பக்தன். காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுடன் எனது பயணம் மிகவும் நீண்டது. 100 காங்கிரஸ் பவன்களை நிறுவ உள்ளோம். அது எங்கள் கட்சியின் கோயில். நான் எனது கட்சியின் வரலாற்றில் நிலைத்திருக்க விரும்புகிறேன். காங்கிரஸ் கட்சிக்காக எல்லோரும் இணைந்து பணியாற்றுவோம்” என்று அவர் கூறினார்.
ஆர்.எஸ்.எஸ். பாடல் சர்ச்சை
கடந்த ஆகஸ்ட் 21 அன்று, கர்நாடக சட்டப்பேரவையில் பெங்களூருவில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் நிகழ்ந்த மரணங்கள் தொடர்பான விவாதம் நடைபெற்றது. அப்போது துணை முதல்வர் டி.கே. சிவகுமார், “நமஸ்தே சதா வத்சலே மாத்ருபூமே” என்ற ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பாடலைப் பாடினார்.
அவர் மேலும் பேசுகையில், “எதிர்க்கட்சித் தலைவர் ஆர். அசோகாவும் நானும் ஒரு காலத்தில் ஆர்.எஸ்.எஸ். சீருடை அணிந்து ஒன்றாகச் செயல்பட்டோம். ஆனால், இப்போது வேறு கட்சிகளில் இருக்கிறோம்” என்று குறிப்பிட்டார்.
ஆர்.எஸ்.எஸ். குறித்து காங்கிரஸ் விமர்சனம்
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்டோர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், அக்கட்சியின் மூத்த தலைவரான சிவகுமார் அந்த அமைப்பின் பாடலைப் பாடியது காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது குறித்து பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி, “டி.கே. சிவகுமார் ஆர்.எஸ்.எஸ். பாடலைப் பாடும் வீடியோவை ராகுல் குடும்பத்தினர் பார்த்தால் கோமா நிலைக்குச் சென்றுவிடுவார்கள். காங்கிரஸ் தலைவர்கள் இடையே ஒருமித்த கருத்து இல்லை என்பது இதன் மூலம் தெளிவாகிறது” என்று கூறியிருந்தார்.