பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில், இந்தியாவில் கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளதற்கு பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பாராட்டு தெரிவித்துள்ளார்.
பெட்ரோல் வரியை குறைத்த மத்திய அரசு
பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 8 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 6 ரூபாயும் குறைத்து மத்திய அரசு அறிவித்துள்ளது. இது மட்டுமல்லாமல், உஜ்வாலா திட்டத்தின்கீழ் ஏழைப் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள எரிவாயு இணைப்புகளுக்கு, ஆண்டுக்கு 12 எரிவாயு சிலிண்டருக்கு, தலா 200 ரூபாய் மானியம், பிளாஸ்டிக், நிலக்கரி, இரும்பு மற்றும் உருக்கு மீதான வரி குறைப்பு, கூடுதல் உர மானியம், சிமெண்ட் விலையை குறைக்க நடவடிக்கை என பல்வேறு அறிவிப்புகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனை பல்வேறு தரப்பினர் வரவேற்றுள்ளனர். இந்த வரவேற்பு இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளிடம் இருந்து மட்டுமில்லாமல் இந்தியாவின் எதிரி நாடாக பார்க்க கூடிய பாகிஸ்தானில் இருந்தும் மத்திய அரசிற்கு கிடைத்துள்ளது.
இந்திய அரசுக்கு பாகிஸ்தான் பாராட்டு
மத்திய அரசின் விலைக் குறைப்பு நடவடிக்கை குறித்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தனது ட்விட்டர் பதிவில், 'குவாட் அமைப்பில் உறுப்பினராக இருந்தாலும், அமெரிக்காவின் அழுத்தங்களை பொருட்படுத்தாமல், இந்தியா ரஷ்யாவிடம் சலுகை விலையில் கச்சா எண்ணெய் வாங்கியது. இதன் மூலம் அந்நாட்டு மக்களுக்கு மலிவு விலையில் எரிபொருள் வழங்கமுடிகிறது என தெரிவித்துள்ளார். இது போன்ற சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையை தான் பாகிஸ்தானில் உருவாக்க தனது அரசு முயற்சி செய்தது என்று தெரிவித்துள்ளார். தனது அரசுக்கு பாகிஸ்தானின் நலன் தான் முக்கியம் என கூறியவர், ஆனால் உள்ளூர் அரசியல்வாதிகள் அந்நிய சக்திக்கு அடிபணிந்து ஆட்சியை கலைத்துவிட்டதாகவும் குற்றம்சாட்டினார். . இதனால் பாகிஸ்தானில் தற்போது தலையில்லா கோழி போல் ஆட்சி நடைபெறுகிறது என்றும் பொருளாதாரம் பாதாளத்தை நோக்கி செல்வதாகவும் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்