நாங்க உதவியும் செய்வோம்... இப்படி ஆப்பும் வைப்போம்... கேரளாவுக்கு பில் போட்ட இந்திய விமானப்படை!

By vinoth kumarFirst Published Nov 30, 2018, 1:10 PM IST
Highlights

கேரளாவில் கடந்த ஆகஸ்டு மாதம் ஏற்பட்ட வெள்ளத்தின்போது மீட்புப்பணியில் ஈடுபட்டதற்காக விமானப்படை ரூ.34 கோடி பில் அனுப்பியுள்ளதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

கேரளாவில் கடந்த ஆகஸ்டு மாதம் ஏற்பட்ட வெள்ளத்தின்போது மீட்புப்பணியில் ஈடுபட்டதற்காக விமானப்படை ரூ.34 கோடி பில் அனுப்பியுள்ளதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். 

கேரள மாநிலத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து மழை வெளுத்து வாங்கியது. இதனால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பெரும்பாலான 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் வெள்ளத்தால் மூழ்கின. 400-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். லட்சக்கணக்கானோர் வீடுகள் மற்றும் உடைமைகளை இழந்து தவித்து வந்தனர். 

இந்த வெள்ளத்தின் போது மீட்புப்பணியில் தேசிய பேரிடர் மீட்புப்படையினர், விமானப்படையினர், துணை ராணுவம், போலீசார், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் என பல்வேறு தரப்பினரும் ஈடுபட்டனர். வெள்ளத்தால் வீடுகளின் மாடிகளில் தஞ்சம் அடைந்தவர்கள் ஏராளமானோரை விமானப்படையினர் மீட்டனர். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுகள் குவிந்தது.

இந்நிலையில் இந்திய விமானப்படை, தாங்கள் செய்த சேவைக்கு ரூ.33.79 கோடி கேட்டு கேரள மாநில அரசுக்கு 'கடிதம்' அனுப்பியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த விவகாரம் தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் பேட்டியளிக்கையில் கடந்த ஆகஸ்ட் மாதம் பெய்த பேய் மழையால் ரூ.31 ஆயிரம் கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டது. ஆனால் தேசிய பேரிடர் நிதியாக இதுவரை கேரள அரசுக்கு ரூ.2,683.18 கோடி மட்டுமே கிடைத்துள்ளது. இந்நிலையில் கேரள வெள்ளத்தில் உதவி செய்ததற்காக ரூ.34 கோடி தாருங்கள் என கேரள அரசுக்கு விமானப்படை கடிதம் எழுதி இருப்பதாக பினராயி விஜயன் தகவல் தெரிவித்துள்ளார். 

கேரள அரசுக்கு மத்திய அரசு ரூ.600 கோடி நிதி வழங்கியது. ஆனால், வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மானிய விலையில் அரிசி, மண்எண்ணெய் போன்ற பொருட்களை வழங்கியதற்காகவும், மீட்புப்பணிக்கு உதவி செய்ததற்காகவும் ரூ.290 கோடி கேட்டு தற்போது கடிதம் அனுப்பியுள்ளது. அப்படி பார்த்தால் ரூ.600 கோடியில் ரூ.290 கோடி மத்திய அரசுக்கு மீண்டும் சென்றுவிடும். இதில் விமானப்படையினர் அவர்களின் மீட்புப்பணிக்காக மட்டும் ரூ.33.79 கோடி பில்தொகை அனுப்பியுள்ளது வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

click me!