பயிர்கடன் தள்ளுபடி செய்தால், நிதிநிலை சீர்குலையும்... மாநில அரசுகளை எச்சரிக்கும் உர்ஜித் படேல்!

First Published Jun 7, 2017, 7:14 PM IST
Highlights
Farm loan waivers can lead to fiscal slippages cautions RBI Governor Urjit Patel


மாநில அரசுகள் விவசாயிகளுக்கு பயிர்கடன் தள்ளுபடி செய்தால், நாட்டின் நிதிநிலையை சீர்குலைத்து, பணவீக்கத்தையும் அதிகப்படுத்தும் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நிதிக்கொள்கை கூட்டம்

நடப்பு நிதியாண்டின் 2-வது நிதிக்கொள்கை மறு ஆய்வுக் கூட்டம் மும்பையில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் கடனுக்கான வட்டி வீதம் மாற்றமில்லாமல் 6.5 சதவீதமாக நீடிக்கிறது, ரிவர்ஸ் ரெப்போ 6 சதவீதமாக நீடிக்கிறது.

இந்த கூட்டத்துக்கு பின் ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது-

வளர்ச்சியை  பாதிக்கும்

மாநில அரசுகள் விவசாயிகளுக்கு பயிர்கடன் தள்ளுபடி செய்து வருகின்றன. ஆனால், மாநில அரசுகள் தங்கள் பட்ஜெட்டில் கடன் தள்ளுபடிக்காக தனியாக இடம் கொடுத்துவிட்டால், மாநிலத்தின் வளர்ச்சியை பாதிக்கும். நாட்டின் ஒட்டுமொத்த நிதிநிலையை சீர்குலைக்கும்.

பணவீக்கம்

அது மட்டுமல்லாமல், பல மாநில அரசுகளால் அறிவிக்கப்படும் பயிர்கடன் தள்ளுபடியால், நிதிநிலைமை மோசமாகி நாட்டை அதிகபட்ச பணவீக்கத்துக்கு இட்டுச் செல்லும்.

நிதிச்சீர்குலைவு

 நாடு வளர்ச்சிப் பாதையில் இருந்து விலகி சரிவைச் சந்திக்க நேரிடும். கடந்த காலங்களில் இதுபோல பயிர்கடன் தள்ளுபடி செய்ததன் காரணமாக குறிப்பிடத்தகுந்த அளவில் நிதிச்சீர்குலைவு ஏற்பட்டது. 

பணவீக்கத்துக்கும் அழைத்துச் சென்றது. ஆதலால், இந்த முறை நிதிச்சீர்குலைவு ஏற்படாமல், நிலைமை கையைவிட்டு சென்றுவிடாமல் மிகவும் கவனமாகச் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

உ.பி. மராட்டியம்

உத்தரப்பிரதேசத்தில் 15 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சியைப் பிடித்த பா.ஜனதா அரசு, அங்குள்ள விவசாயிகளுக்கு ரூ. 36 ஆயிரம் கோடி பயிர்கடனை தள்ளுபடி செய்தது.

இதற்கிடையே மராட்டிய முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ், 5 ஏக்கருக்கு குறைவான நிலம் வைத்துள்ள 1.07 கோடி விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்து இருந்தார்.  மத்தியப் பிரதேச மாநிலமும் கடன்தள்ளுபடி குறித்து பேசி வருகிறது. இதைச் சுட்டிக்காட்டி ரிசர்வ் வங்கி அறிக்கை வௌியிட்டுள்ளது.

click me!