PM Modi at hyderabad: இளைஞர்கள் அரசியலில் நுழைய குடும்ப அரசியல் தடையாக உள்ளது… பிரதமர் மோடி குற்றச்சாட்டு!!

By Narendran SFirst Published May 26, 2022, 4:52 PM IST
Highlights

இளைஞர்கள் உலகை வழிநடத்த முடியும் என்பதை நிரூபித்து வருவதாகவும் இந்தியாவின் இளைஞர்களையும், இந்தியாவின் தயாரிப்பையும் புதிய மரியாதையுடனும் புதிய நம்பிக்கையுடனும் உலக நாடுகள் பார்ப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

இளைஞர்கள் உலகை வழிநடத்த முடியும் என்பதை நிரூபித்து வருவதாகவும் இந்தியாவின் இளைஞர்களையும், இந்தியாவின் தயாரிப்பையும் புதிய மரியாதையுடனும் புதிய நம்பிக்கையுடனும் உலக நாடுகள் பார்ப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லியிலிருந்து புறப்பட்டு தனி விமானம் மூலம் மதியம் 1 மணியளவில் ஹைதராபாத் பேகம்பேட் விமான நிலையம் சென்றடைந்தார். அவரை தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய இணை அமைச்சர் கிஷண் ரெட்டி, பாஜக தெலங்கானா மாநில தலைவர் பண்டி சஞ்சய், முன்னாள் எம்பியும், நடிகையுமான விஜயசாந்தி உட்பட பல மூத்த பாஜக நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து, பொன்னாடை போர்த்தி வரவேற்றனர். பின்னர் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, நமது நாட்டில் புதிதாக உருவாகியுள்ள சிறு நிறுவனங்கள் சர்வதேச கவனத்தை ஈர்த்து வருகிறது. இன்று புதிய நிறுவனங்கள் அதிகரிப்பதில் உலகில் மூன்றாவது நாடாக இந்தியா திகழ்கிறது. இந்தியாவின் தீர்வுகள் உலகளவில் செயல்படுத்தப்படுவதை நாம் அடிக்கடி பார்க்கிறோம்.

எனவே, இந்த முக்கியமான நாளில், உங்கள் தனிப்பட்ட இலக்குகளை நாட்டின் இலக்குகளுடன் இணைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இன்று நம் இளைஞர்கள் உலகை வழிநடத்த முடியும் என்பதை நிரூபித்து வருகின்றனர். எனவே இன்று உலகம் இந்தியாவையும், இந்தியாவின் இளைஞர்களையும், இந்தியாவின் தயாரிப்பையும் புதிய மரியாதையுடனும் புதிய நம்பிக்கையுடனும் பார்க்கிறது. கடந்த 8 ஆண்டுகளில் கிடைத்த மிகப்பெரிய உத்வேகம் பொதுமக்களின் பங்களிப்பு. நாட்டு மக்களே முன்னேறி சீர்திருத்தங்களுக்கு உத்வேகம் அளித்து வருகின்றனர். இதை ஸ்வச் பாரத் அபியானில் பார்த்தோம். உள்ளூர் மற்றும் தன்னம்பிக்கை இந்தியா பிரச்சாரத்தில் பொதுமக்களின் பங்கேற்பின் சக்தியை இப்போது காண்கிறோம். மருத்துவக் கல்வியிலும் பல சீர்திருத்தங்களைச் செய்துள்ளோம். இதன் மூலம் கடந்த 8 ஆண்டுகளில் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 380ல் இருந்து 600க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. நாட்டில் மருத்துவப் பட்டதாரி மற்றும் முதுநிலைப் பட்டதாரி இடங்கள் 90 ஆயிரத்தில் இருந்து 1.5 லட்சத்துக்கும் அதிகமாக உயர்ந்துள்ளன.

குடும்ப அரசியல் கட்சிகள் எவ்வாறு ஊழல் மயமாகி உள்ளன என்பதையும், அவை எவ்வாறு ஒரு குடும்பத்திற்காகவே மட்டுமே இயங்குகின்றன என்பதையும் நாடு பார்த்துக்கொண்டிருக்கிறது. குடும்ப அரசியல்  கட்சி ஒரு அரசியல் பிரச்சினை மட்டுமல்ல, நமது நாட்டின் ஜனநாயகம் மற்றும் இளைஞர்களின் மிகப்பெரிய எதிரி. ஒரே குடும்பத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் முகமாக ஊழல் எப்படி மாறுகிறது என்பதை நம் நாடு பார்த்துள்ளது. குடும்ப அரசியல் காரணமாக இளைஞர்களுக்கு அரசியலில் நுழைய வாய்ப்பு கிடைப்பதில்லை. குடும்ப அரசியல் கட்சிகள் தங்களின் வளர்ச்சியைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறார்கள். ஏழை மக்களைப் பற்றிக் கவலைப்படாத இந்தக் கட்சிகள், ஒரு குடும்பம் எப்படி ஆட்சியில் இருக்க முடியுமோ அவ்வளவு கொள்ளையடிக்கலாம் என்பதில் தான் அவர்களின் அரசியல் நோக்கம் உள்ளது. மக்களின் வளர்ச்சியில் அவர்களுக்கு துளி கூட அக்கறை இல்லை என்று தெரிவித்துள்ளார். 

click me!