18 வயதுக்கு மேற்பட்டவர்கள் வரும் மே ஒன்றாம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள அனுமதியளித்துள்ளது மத்திய அரசு.
இந்தியாவில் கொரோனா 2ம் அலை அதிதீவிரமாக உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த, தடுப்பூசி போடுவதை விரைவுபடுத்தியுள்ளது மத்திய அரசு. முன்களப்பணியாளர்களுக்கு முன்னுரிமை கொடுத்து தடுப்பூசி போடப்பட்டது.
அதன்பின்னர் முதியவர்கள், 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் என படிப்படியாக் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுவரும் நிலையில், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் வரும் மே ஒன்றாம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போட்டுகொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
பிரதமர் மோடி மருத்துவ நிபுணர்கள், மருந்து நிறுவனங்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் இன்று மாலை ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கு பின்னர் இந்த உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள மெடிக்கல்களிலும் கொரோனா தடுப்பூசி விற்பனை செய்ய மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. உற்பத்தி செய்யப்படும் 50% தடுப்பூசிகளை மத்திய அரசுக்கு அளிக்க வேண்டும். மீதமுள்ள 50% தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கும் பொதுச்சந்தை விற்பனைக்கும் அளிக்கலாம் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.