டெல்லி அமைச்சர் ஜெயினுக்கு ஜூன்.9 வரை அமலாக்கத்துறை காவல்... டெல்லி நீதிமன்றம் அனுமதி!!

By Narendran SFirst Published May 31, 2022, 6:03 PM IST
Highlights

டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு வரும் ஜூன் 9 ஆம் தேதி வரை அமலாக்கத்துறை காவல் விதித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு வரும் ஜூன் 9 ஆம் தேதி வரை அமலாக்கத்துறை காவல் விதித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசின் அமைச்சர் கொல்கத்தாவைச் சேர்ந்த நிறுவனத்துடன் 2015-16 ஆம் ஆண்டில் ஹவாலா பரிவர்த்தனைகளில் ஈடுபட்டதாக விசாரணை நிறுவனம் குற்றம் சாட்டியது. இதை அடுத்து ரூ.1.62 கோடி வரை பணமோசடி செய்ததாக மத்திய புலனாய்வுத் துறை கடந்த ஆகஸ்ட் 2017ல் சத்யேந்தர் ஜெயின் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்தது.

2011-12ல் ரூ.11.78 கோடியும், 2015-16ல் ரூ.4.63 கோடியும் மோசடி செய்வதற்காக ஜெயின் மற்றும் அவரது குடும்பத்தினர் உண்மையான வணிகம் இல்லாத நான்கு ஷெல் நிறுவனங்களை அமைத்ததாக சிபிஐ குற்றம் சாட்டியது. சிபிஐயின் முதல் தகவல் அறிக்கை அடிப்படையில் பணமோசடி குற்றச்சாட்டுகள் குறித்து அமலாக்க இயக்குனரகம் தனது விசாரணையைத் தொடங்கியது. இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட டெல்லி அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் புகாரில் உண்மைத் தன்மை இருப்பதாகக் கூறி சத்யேந்திர ஜெயினை நேற்று நள்ளிரவு அதிரடியாகக் கைது செய்தனர். 

மாநில அமைச்சரைக் கைது செய்ய பல்வேறு முன் அனுமதி பெற வேண்டிய சூழல் இருக்கும் நிலையில், டெல்லி ஒரு யூனியன் பிரதேசம் என்ற அடிப்படையில் இந்த கைதை அமலாக்கத்துறை எளிதாக மேற்கொண்டது. இந்த நிலையில் நேற்று கைது செய்யப்பட்ட அவரை, அமலாக்கத்துறை விசாரணைக்கு அனுமதிக்கும்படி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சார்பில் முறையிடப்பட்டது. இதனை ஏற்ற நீதிமன்றம் வரும் 9 ஆம் தேதி வரை அமலாக்கத்துறை விசாரணைக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் அதிரடியாக கைது செய்யப்பட்ட சம்பவம் டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

click me!