
ரெயிலில் முன்பதிவு செய்யப்பட்ட படுக்கை வசதியில் பயணிக்கும் பயணிகளுக்கு இடையே சண்டையையும், வாக்குவாதத்தையும் தடுக்கும் நோக்கில் தூங்கும் நேரத்தை ஒரு மணிநேரம் குறைத்து ரெயில்வே அறிவித்துள்ளது.
படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் பயணிப்போர் இரவு 9 மணி முதல் காலை 6 மணிவரை தூங்கிக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. இது ஒரு மணிநேரம் குறைக்கப்பட்டு, இரவு 10 மணி முதல் காலை 6 மணிநேரமாக மாற்றப்பட்டுள்ளது.
படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில், நடுத்தளம் மற்றும் கீழ்தளத்தில் இருக்கும் பயணிகள் யாராவது ஒருவர் அதிக நேரம் தூங்குவதால், பயணிகள் அமர முடிவதில்லை. இதனால் பயணிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. இதைத் தடுக்கும் வகையில் தூங்கும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கடந்த ஆகஸ்ட் 31-ந்தேதி முன்தேதியிட்டு அனைத்து ரெயில்வே கோட்டங்களுக்கும் ரெயில்வே துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அந்த அறிக்கையில், “ பயணிகள் முன்பதிவு செய்த படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் இரவு 9 மணிமுதல் காலை 6 மணி வரைதூங்கலாம் என்ற நேரம், குறைக்கப்பட்டு இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை என்று மாற்றப்பட்டுள்ளது’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், இந்த விதிமுறைகளில் இருந்து சில விலக்குகளுக்கும் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி, “ நோய்வாய்ப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள் ஆகியோர் பயணிக்கும் போது, பயணிள் அவர்களுடன் இணக்கமாக இருந்து குறிப்பிட்ட நேரத்துக்கும் அதிகமாக தூங்க அனுமதிக்கலாம்’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், “ முன்பதிவு செய்யப்பட்ட படுக்கை வசதி கொண்டரெயில் பெட்டிகளில் பயணிகள் தூங்கும் நேரம் ஒரு மணிநேரம் குறைக்கப்பட்டுள்ளது. ஏனென்றால், சில பயணிகள் ரெயிலில் ஏறியவுடன் படுக்கையை விரித்து தூங்கத் தொடங்கிவிடுகிறார்கள். இரவாக இருந்தாலும், பகலாக இருந்தாலும், உடன் பயணிக்கும் மேல்படுக்கை, நடுப்படுக்கையில் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகிறார்கள். நடுவரிசையில் பயணிக்கும் பயணிகள் அல்லது கீழ்தளத்தில் பயணிக்கும் பயணிகள் நீண்டநேரம் தூங்குவதால் பல சிக்கல் ஏற்படுவதை தடுக்கவே இது கொண்டுவரப்பட்டுள்ளது.