
நாய்கள் மனிதர்களிடம் மிகவும் விசுவாசமான மற்றும் இரக்கமுள்ள விலங்குகளில் ஒன்றாக அறியப்படுகின்றன. இதனால் தான் நாய்களை பெரும்பாலானோர் வீட்டு விலங்காக வளர்க்க விரும்புகின்றனர். பல நேரத்தில் உரிமையாளரை காப்பாற்றுவதற்காக பாம்பிடம் சண்டையிட்டு நாய் உயிரிழக்கும் சம்பவம் அவ்வப்போது நிகழ்ந்து வருகின்றன.
தென்மேற்கு பருவமழை
இந்நிலையில் இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் கடந்த ஜூன் 20ம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததை அடுத்து மழை வெளுத்து வாங்கி வருகிறது. மேகவெடிப்பு காரணமாக பெய்த பலத்த மழையால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. குறிப்பாக மாண்டி மாவட்டத்தில் மேக வெடிப்புகள், திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் இம்மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. திடீர் வெள்ளத்தால் மண்டியில் 100க்கும் மேற்பட்ட சாலைகள் மூடப்பட்டுள்ளன.
நள்ளிரவு விடாமல் குறைத்த நாய்
இந்நிலையில் இமாச்சலப் பிரதேச மாநிலம் மண்டி மாவட்டத்தில் உள்ள தரம்பூர் பகுதியில் உள்ள சியாதி கிராமத்தில் விடாமல் மழை வெளுத்து வாங்கியது. அப்போது நரேந்திரா என்பவரின் வீட்டில் வளர்க்கப்படும் நாய் ஒன்று அன்று நள்ளிரவு விடாமல் குறைத்துக் கொண்டே இருந்தது. நாயின் சத்தத்தை கேட்டு எழுந்த உரிமையாளர் தனது வீட்டு சுவரில் விரிசல் ஏற்பட்டு தண்ணீர் உள்ளே வருவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
67 பேர் உயிர் தப்பினர்
இதனையடுத்து நள்ளிரவில் நாயை அழைத்து கொண்டு கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டு கதவையும் தட்டி உடனடியாக கிராமத்தினர் வீட்டை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு எச்சரித்துள்ளார். இதனால் கிராமத்தில் இருந்த அனைவரும் பாதுகாப்பான இடத்திற்கு சென்றுள்ளனர். அடுத்த சிறிது நேரத்தில் அந்த கிராமத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு பல வீடுகள் தரைமட்டமாகின. நாயின் சத்தத்தால் அந்த கிராமத்தில் உள்ள 20 குடும்பங்களை சேர்ந்த 67 பேர் உயிர் தப்பி இருக்கின்ற தகவல் தற்போது வெளியாகி அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்திருக்கிறது.