கடந்த ஆண்டில் 18 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட நிலையில், எம்.பி.க்கள் தங்கள் சம்பளத்தை தாங்களே 400 சதவீதம் உயர்த்திக்கொள்வதா? என, வருண்காந்தி கேள்வி எழுப்பினார்.
மக்களவையில் கேள்வி நேரத்தின்போது இது குறித்து அவர் பேசியதாவது-
கடந்த 10 ஆண்டுகளில் நமது எம்.பி.க்களின் சம்பளம் 400 சதவீதம் உயர்த்தப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் கடந்த ஆண்டில் மட்டும் நாட்டில் 18 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு இருக்கிறார்கள். இந்த நிலை எனக்கு கவலை அளிப்பதாக உள்ளது.
ஜவகர்லால் நேரு தலைமையில் அமைந்த முதல் மத்திய அமைச்சரவையில், அப்போது மக்களின் துயரை கருத்தில் கொண்டு 6 மாதங்களுக்கு ஊதியம் வாங்குவது இல்லை என முடிவு எடுத்ததை இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
சமீபத்தில் டெல்லியில் போராட்டம் நடத்திய தமிழக விவசாயிகள், தங்கள் சிறு நீரை குடித்ததுடன் தற்கொலை செய்த சக விவசாயிகளின் மண்டை ஒடுகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் கடந்த 19-ந்தேதி அன்று அந்த மாநில சட்டசபையில் எம்.எல்.ஏ.க்களின் சம்பளம் இரு மடங்காக உயர்த்தப்பட்டு இருப்பது, உணர்வற்ற தன்மையை பிரதிபலிக்கிறது.
கடந்த 1952-ம் ஆண்டில், 123 நாட்கள் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டம், 2016-ம் ஆண்டில் 75 நாட்களாக சுருங்கிவிட்டது. கடந்த ஆண்டில் குளிர்கால கூட்டத் தொடரின் நாட்கள் 16 சதவீதமாக குறைந்து இருப்பது அவமானம்.
இவ்வாறு வருண் காந்தி கூறினார்.
திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் சவுகதா ராய் வருண் காந்தியின் கருத்தை வரவேற்று பேசினார்.