
நாட்டில் தற்போது நிலவும் பணத்தட்டுப்பாடு பிரச்சினை பிப்ரவரி மாத இறுதியில்தான் சரியாகும் என்று ஸ்டேட் வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம், ஆமதாபாத் நகரில் 8-வது குஜராத் சர்வதேச மாநாடு நடந்து வருகிறது. இதில் பங்கேற்க ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா வந்திருந்தார்.
பிப்ரவரி இறுதி
அப்போது விமானநிலையத்தில் நிருபர்களுக்கு அவர் நேற்று பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறுகையில், “ ரூபாய் நோட்டு தடை அறிவிப்புக்கு பின், நாட்டில் கடும் பணத்தட்டுப்பாடு உருவாகி இருக்கிறது. அந்த சூழல் பிப்ரவரி இறுதியில் சரியாகி விடும் என்று நம்புகிறேன்.
பணம் எடுக்கலாம்
பிப்ரவரி மாதத்துக்கு பின், வங்கியில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் வரிசையில் காத்திருந்து பணத்தை பெற வேண்டிய அவசியம் இருக்காது என்று உறுதியாகக் கூறுகிறேன். அனைத்து வங்கிகளுக்கும் போதுமான அளவில் பணம் சப்ளை செய்யப்பட்டு விடும். மக்கள் தங்கள் தேவைக்கு ஏற்ப பணத்தை வங்கி, ஏ.டி.எம்.களில் இருந்த எடுக்கலாம்.
டிஜிட்டல் பரிமாற்றம்
இந்த மாநாட்டில் டிஜிட்டல் பரிமாற்றத்தை ஊக்குவிப்பது குறித்து ஆலோசிக்கப்படும். கரன்சி நோட்டுகள் மீண்டும் புழக்கத்துக்கு சரளமாக வந்துவிடும் அதில் சந்தேகம் இல்லை. ஆனால், ரூபாய் நோட்டுகள் சரளமாக புழக்கத்துக்கு வந்தபின் ரூபாய் நோட்டுகளை முற்றிலும் நம்பிக்கொண்டு இருக்காமல், டிஜிட்டல் பரிமாற்றத்தை நோக்கி நகர வேண்டும். இல்லாவிட்டால், டிஜிட்டல் பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் இந்தமுயற்சிகள் அர்த்தமில்லால் போய்விடும்.
ஆதலால், மக்களிடையே டிஜிட்டல் பரிமாற்றத்தை ஊக்குவிக்கத் தேவையான அனைத்து விழிப்புணர்வு பிரசாரங்களையும் செய்வது குறித்து ஆலோசிப்போம்'' எனத் தெரிவித்தார்.