
டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளதால், தாஜ்மஹாலுக்கு பாதிப்பு ஏற்படும் என கூறப்படுகிறது. இதனை கடுப்படுத்த முடியாமல் டெல்லி அரசு திணறி வருகிறது.
டெல்லியில் தொடர்ந்து 5வது நாளாக காற்று மாசு சூழ்ந்துள்ளது. டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு சுற்றியுள்ள பகுதிகளுக்கும் பரவி வருகிறது. இதனால் பொதுமக்கள் முகமூடி அணிந்து செல்கின்றனர்.
உத்திர பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பனிப்புகை சூழ்ந்துள்ளதால் தாஜ்மஹால் மீது தூசி படியும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தாஜ்மஹால் நிறம் மாற வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காற்று மாசை கட்டுப்படுத்த ஆலோசனை கொடுத்தால் பரிசு வழங்கப்படும் என்று டெல்லி அரசு அறிவித்துள்ளது.
17 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்று மாசு அதிகரித்துள்ளது. கடுமையான பனி மூட்டம் நிலவுகிறது. இதனால் மக்களுக்கு கண் எரிச்சல் மூச்சு திணறல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. காற்று மாசு அதிகரிப்பால் மக்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த 5 நாட்களாக காற்று மாசு கடுமையாக சூழ்ந்துள்ளதால் தலைநகர் டெல்லி அடியோடு முடங்கியது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பள்ளிகளுக்கு தொடர்ந்து விடுமுறை விடப்பட்டது.
எதிரே வருபவர்கள் தெரியாத அளவுக்கு புகை சூழ்ந்துள்ளதால், போக்குவரத்து பல இடங்களில் ஸ்தம்பித்தது. மாசு பாதிப்பு காரணமாக குழந்தைகள், வயதானவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். சுவாசக் கோளாறு சம்பந்தப்பட்ட நோயாளிகள் வரத்து அதிகரித்து இருப்பதாக டெல்லி மருத்துவமனைகள் தெரிவித்துள்ளன.
முக்கிய மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. கட்டுமான பணிகளும் நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. காற்று மாசைக்கட்டுப்படுத்த மத்திய அரசும், டெல்லி அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
மரங்கள் மீது , தரைகளிலும் தண்ணீர் தெளிக்கப்படுகிறது. காற்று மாசைக்கட்டுபடுத்த ஆலோசனை வழங்கினால் ரூ.5 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என்று டெல்லி அரசு அறிவித்துள்ளது. அதேபோல 15 ஆண்டுகளுக்கு மேலான டீசல் வாகனங்களின் பதிவெண்களை நீக்கவும் முடிவு செய்துள்ளது.
இதனிடையெ டெல்லி சதர்பஜார் அருகே பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதில் ஏராளமான வீடுகள் எரிந்து நாசமாகியது. 15க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் விரைந்து சென்று தீயை அணைத்தன. ஏற்கனவே காற்று மாசு அதிகரிப்பால் தலைநகர் டெல்லி தவித்துவரும் நிலையில் தீ விபத்தால் பெரும் புகைமூட்டம் ஏற்பட்டுள்ளது.