டெல்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயினின் நீதிமன்ற காவலை நீட்டித்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயினின் நீதிமன்ற காவலை நீட்டித்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசின் அமைச்சர் கொல்கத்தாவைச் சேர்ந்த நிறுவனத்துடன் 2015-16 ஆம் ஆண்டில் ஹவாலா பரிவர்த்தனைகளில் ஈடுபட்டதாக விசாரணை நிறுவனம் குற்றம் சாட்டியது. இதை அடுத்து ரூ.1.62 கோடி வரை பணமோசடி செய்ததாக மத்திய புலனாய்வுத் துறை கடந்த ஆகஸ்ட் 2017ல் சத்யேந்தர் ஜெயின் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்தது. முறைகேடாக சம்பாதித்த பணத்தை தன் குடும்பத்தினர் பெயரிலான போலி நிறுவனங்களில் அவர் முதலீடு செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்தது. இந்த வழக்கில் 2018ல் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இதன் அடிப்படையில், பணப்பரிமாற்ற மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்தது.
சத்யேந்திர ஜெயினின் குடும்பத்தினர் பெயரில் இருந்த 4.81 கோடி ரூபாய் சொத்துக்களை அமலாக்கத்துறை கடந்த ஏப்ரலில் பறிமுதல் செய்தது. மே 30ல் சத்யேந்திர ஜெயின் கைது செய்யப்பட்டார். கைதுக்கு பின்னர் டெல்லி ரோஸ் அவன்யூ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார் . அப்போது நீதிபதிகள் 9 ஆம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரணை நடத்த உத்தரவிட்டனர். இதனை தொடர்ந்து ஜூன் 9ம் தேதி வரை அமலாக்கத்துறை விசாரணைக்காக காவலில் எடுத்தனர். இதனிடையே கடந்த 7 ஆம் தேதி சத்யேந்தர் ஜெயினின் வீடு, அலுவலகங்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் இருந்து சுமார் 2 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம் மற்றும் ஒரு கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டது.
இதனை தொடர்ந்து காவலை நீட்டிக்க கோரி அமலாக்கத்துறை சார்பில் டெல்லி ரோஸ் அவன்யூ சிறப்பு நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. அமலாக்கத்துறையின் கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள் சத்யேந்தர் ஜெயினின் அமலாக்கத்துறை காவலை ஜூன் 13 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டனர். இந்த நிலையில், அமலாக்க துறை காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், டெல்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் இன்று ரோஸ் அவென்யூ கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவரிடம் விசாரணை நடத்த நீதிமன்றத்தில் அமலாக்க துறை கோரிக்கை எதுவும் வைக்காத நிலையில் ஜெயின் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.