நெருக்கடியில் மக்கள்… அதிகரிக்கும் காற்றுமாசு… கடும் கட்டுப்பாடுகளை விதித்தது டெல்லி அரசு!!

By Narendran SFirst Published Nov 17, 2021, 6:25 PM IST
Highlights

டெல்லியில் காற்று மாசு காரணமாக நவம்பர் 21 ஆம் தேதி வரை கட்டுமானம், இடிப்பு பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டதுடன் அரசுத் துறைகள் வீட்டிலிருந்து வேலை செய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் காற்று மாசு மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது. இந்த நிலையில் மனிதர்கள் சுவாசிப்பதற்கு தகுதியானது அல்ல என்ற அளவிற்கு காற்றின் தரம் தற்போது காணப்படுகிறது. இங்கு பல்வேறு இடங்களில் AQI எனப்படும் காற்றின் தரக்குறியீடு 400யை தாண்டியுள்ளது. இந்த நிலையில் டெல்லியில் காற்று மாசின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. பனிக்காலங்களில் காற்றில் மாசுத் துகள்கள் தங்கிவிடுவதால் மக்கள் பல்வேறு சிரமங்களுக்குள்ளாகின்றனர். இந்த நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு வெடித்தன் மூலம் டெல்லியில் காற்று மாசு மேலும் அதிகரித்துள்ளது. இதனால் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. காற்று மாசை குறைக்க தண்ணீரை தெளிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. டெல்லியை உலுக்கி வரும் காற்று மாசு குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது காற்று மாசை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், டெல்லியில் ஐந்து மற்றும் ஏழு நட்சத்திர ஓட்டல்களில் அமர்ந்திருக்கும் விவசாயிகள் வயல்வெளிகளில் கழிவுகளை எரிப்பது டெல்லியில் மாசு ஏற்படுவதற்கு 30 அல்லது 40 சதவிகிதம் காரணம் என விமர்சிக்கின்றனர். ஆனால் தடை செய்யப்பட்டிருந்தும் பட்டாசுகள் எப்படி வெடிக்கப்படுகின்றன. இந்த தடை முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. தொலைக்காட்சி சேனல்களில் நடைபெறும் இந்த விவாதங்கள் மற்றவற்றை விட அதிக மாசை உருவாக்குகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர்களின் சொந்த விருப்பு வெறுப்புகள் இருக்கின்றன. இதுபோன்ற விவாதங்களில் வெளிப்படுகின்றன. விவசாயிகள் நிலத்தில் இருந்து பெற்ற வருமானத்தைப் பார்த்தீர்களா. தடையை மீறி பட்டாசு வெடிப்பதை நாங்கள் ஏற்கவில்லை. கண்டிக்கிறோம் என்று கூறினர். இதனிடையே காற்றுமாசை கட்டுப்படுத்தும் விதமாக கட்டுமான பணிகளுக்கு தடை, போக்குவரத்து தடை போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளை அம்மாநில அரசு விதித்துள்ளது. இந்நிலையில், டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், டெல்லியில் நவம்பர் 21 ஆம் தேதி வரை கட்டுமானம் மற்றும்  கட்டிட இடிப்பு பணிகளுக்கு தடை விதிக்கப்படுவதாகவும் நவம்பர் 21 ஆம் தேதி வரை அரசுத் துறைகள் வீட்டிலிருந்து 100 சதவீதம் இயங்க அனுமதிக்கப்படுவதாகவும் தெரிவித்தார். இதேபோல்,  பள்ளிகள், கல்லூரிகள், நிறுவனங்கள், பயிற்சி மையங்கள், நூலகங்கள் மறு உத்தரவு வரும் வரை மூடப்படுவதாகவும் அவர் அறிவித்தார். மேலும், அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் வாகனங்கள் தவிர, டெல்லியில் அனைத்து வாகனங்களும் நுழைவதற்கு தடை விதித்தும் அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்தார். காவல்துறை மற்றும் போக்குவரத்து துறை இணைந்து இதை உறுதி செய்யும் என்று கூறிய அவர்,டெல்லியில் பொது போக்குவரத்தை அதிகரிக்க 1000 தனியார் சிஎன்ஜி பேருந்துகளை வாடகைக்கு எடுக்கும் பணி நாளை தொடங்குகிறது எனவும் தெரிவித்தார். 

click me!