
தனி மாநிலம் கேட்டு டார்ஜிலிங்கில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் மருந்துக் கடைக்குச் சென்ற ஒருவரை பாதுகாப்புப் படையினர் துப்பாக்கியல் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்காள மாநிலம் டார்ஜிலிங் மலைப்பகுதியை தனி மாநிலமாக்க கோரி கூர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா மற்றும் அதன் ஆதரவு கட்சிகள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
டார்ஜிலிங்கில் முழுஅடைப்பு போராட்டம் நடந்து வருவதால் மருந்துகடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டு உள்ளன. இதனால் அங்கு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர். அங்கு நடைபெற்று வரும் போராட்டங்களில் ஏற்பட்ட வன்முறை காரணமாக இதுவரை 4 பேர் உயிரிழந்து உள்ளனர்.
இந்த நிலையில் கூர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா ஒருவர் மருந்து வாங்க கடைக்கு சென்றார். அப்போது, பாதுகாப்பு படையினர் அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த போராட்டக்காரர்கள் சோனாடா போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் மற்றும் பாதுகாப்பு படை வீரர்கள் மீது அவர்கள் கல் வீசி தாக்குதல் நடத்தினர்.
நிலைமை மோசமானதால், கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். மேலும், வன்முறையை கட்டுப்படுத்த ரப்பர் குண்டுகளால் சுட்டனர். இதனால் அனைவரும் சிதறி ஓடினர்.
அப்போது சிலர் அங்கிருந்த போக்குவரத்து சோதனைச் சாவடியை தீ வைத்து எரித்தனர்.
தற்போது போலீசாரும், பாதுகாப்பு படையினரும் சட்டம்-ஒழுங்கை பராமரித்து வருதால் மீண்டும் அமைதி திரும்பி வருவதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.